10 கோடி செலுத்த காலஅவகாசம் கேட்ட விஷால் மனு தள்ளுபடி
விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி தயாரித்த படங்களுக்கான செலவுகளுக்கு லைகா நிறுவனத்திடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் பெற்றிருந்தார். இந்த கடனை திருப்பிச் செலுத்தும் வகையில் தான் நடிக்கும் படங்கள், தயாரிக்கும் படங்களின் உரிமத்தை லைகா நிறுவனத்திற்கு தருவதாக ஒப்பந்தம் செய்திருந்தார். இந்த ஒப்பந்தத்தை விஷால் மீறியதால் லைகா நிறுவனம் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் லைகா நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை, 30 சதவீத வட்டியுடன் திருப்பிக் கொடுக்கும்படி, விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து, விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய விஷால் தரப்புக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், விஷாலின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதால் 10 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய 6 வார கால அவகாசம் வழங்கக் கோரி விஷால் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. விஷால் தரப்பின் கால அககாசத்தை ஏற்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்ய உத்தரவிட்டது.