என்னுடைய படம் பார்க்க தனுஷ் வந்தது ஏன் ? ; மிருணாள் தாக்கூர் வெளிப்படை பதில்
சமீப காலமாக ரசிகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் தனுஷ் இருவருக்கு இடையே காதல் மலர்ந்துள்ளதா என்பது பற்றி தான். காரணம் அவர் தமிழில் ஒரு படம் கூட நடிக்காத நிலையில் நடிகர் தனுஷ் உடன் அவருக்கு நட்பு ஏற்பட்டு சில நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்ளும் அளவிற்கு நெருக்கம் காட்டி வருவது ரசிகர்களிடம் ஆர்வத்தையும் திரையுலகில் சலசலப்பையும் ஏற்படுத்தியது.
குறிப்பாக மிருணாள் தாக்கூர் நடித்த ‛சன் ஆப் சர்தார்' திரைப்படத்தின் சிறப்பு பிரிமியர் காட்சியில் தனுஷ் கலந்து கொண்டார். இந்த நிலையில் தற்போது மிருணாள் தாக்கூர் நடித்துள்ள ‛தோ தீவானே செஹெர் மெய்ன்' என்கிற படம் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியின் போது இது குறித்த கேள்வி மிருணாள் தாக்கூரிடம் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர் கூறும்போது, “தனுஷ் நடித்த ராயன், மாரி, ராஞ்சனா, கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் அவரது நடிப்பை பார்த்து வியந்திருக்கிறேன். அதிலும் அசுரன் திரைப்படத்தை திரும்பத் திரும்ப பலமுறை பார்த்திருக்கிறேன். அவர் ஹிந்தியில் தேரே இஷ்க் மெய்ன் என்கிற படத்தில் நடித்து வந்தபோது அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவரிடம், சார் என்னுடைய சன் ஆப் சர்தார் படத்தின் சிறப்பு பிரிமியர் காட்சி இருக்கிறது, அதற்கு நீங்கள் வர முடியுமா என்று கேட்டேன். அவர் வருவார் என நான் நினைக்கவில்லை. ஆனால் அவர் வந்தார். அதனால் எனக்கு மகிழ்ச்சி தான். அவருடன் நிச்சயமாக ஒரு நாள் இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.