47 வருடங்களுக்குப் பிறகு கூட்டணி : எதையும் 'ஷேர்' செய்யாத ரஜினிகாந்த்
தமிழ்த் திரையுலகத்தின் இரு பெரும் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த். கதாநாயகர்களாக ஒரே காலகட்டத்தில் வளர்ந்தவர்கள். சில படங்களில் இணைந்து நடித்த பின் தனித்தனி கதாநாயகர்களாக நடிப்பது என பேசி அதன்பின் சேர்ந்து நடிப்பதை கறாராகத் தவிர்த்தவர்கள்.
47 வருடங்களுக்குப் பிறகு இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. இந்தியத் திரையுலகமே இவர்கள் இணைந்து நடிப்பதை ஆச்சரியம், அதிசயத்துடன் வரவேற்றுள்ளது.
தனது நண்பர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பது குறித்து படத்தின் அறிவிப்பு வீடியோவைப் பகிர்ந்து கமல்ஹாசன், “எனது நண்பர் ரஜினிகாந்துடன் ஒரு சிறப்பான ரியூனியன். ஒவ்வொரு சிறந்த பயணமும் இன்னொரு அத்தியாயத்திற்குத் தகுதியானது,” என்று எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் விதத்திலும் அல்லது அறிவிப்பு வீடியோவைப் பகிர்ந்தும் ரஜினிகாந்தும் எக்ஸ் தளத்தில் ஏதாவது பதிவு செய்வார் என்று இரண்டு நாட்களாகக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் 'படையப்பா' படத்தின் ரிரிலீஸ் குறித்து கூட பதிவிட்டிருந்தார் ரஜினிகாந்த். அதற்கு முன்பு 2022ல் 'பாபா' ரீரிலீஸ், அதற்கும் முன்பாக 2017 மற்றும் 2016ல் '2.0' குறித்தும், 2015ல் 'கபாலி' படப்பிடிப்பு ஆரம்பம் குறித்தும் பதிவிட்டுள்ளார்.
கமல்ஹாசன் குறிப்பிட்டது போல, இந்த 'சிறப்பான ரியூனியன்' குறித்து சமூக வலைத்தளங்களில் ரஜினிகாந்த் இதுவரை எதுவுமே பதிவிடவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது.