பிளாஷ்பேக் : கழுகு நடித்த படம்
மிருகங்களை வைத்து படம் எடுத்து பல வெற்றிகளை கொடுத்தவர் ராம நாராயணன். ஆடு, மாடு, குரங்கு, பாம்பு, யானை உள்ளிட்ட பல மிருகங்களை நடிக்க வைத்து படம் இயக்கி உள்ளார். அவர் கழுகை வைத்து தயாரித்த ஒரே படம் 'கழுகுமலை கள்ளன்'.
1988ல் வெளிவந்த இந்தப் படத்தில் சரண்ராஜ் நாயகனாக நடித்தார். வில்லனாக நடித்து வந்த அந்த சரண்ராஜ் ஆக் ஷன் ஹீரோவாக நடித்த முதல் படம். அவருடன் ரேகா, சின்னி ஜெயந்த், லூசு மோகன், நாசர், கோவை சரளா, வாசுகி, லலிதா குமாரி, கே.ஆர்.சாவித்திரி, அனாமிகா, பேபி மேதாவிலாசினி, டிஸ்கோ சாந்தி உள்ளிட்ட பலர் நடித்தனர். ராஜசேகர் இயக்கினார். சந்திரபோஸ் இசையமைத்தார்.
மலையூர் மம்பட்டியான், கரிமேடு கருவாயன், கும்பக்கரை தங்கையா பாணியிலான கிராமத்து ஆக் ஷன் ஹீரோ கதை. அப்பாவியான சரண்ராஜ் குடும்பத்தை வில்லன்கள் அழித்து விடுவதால் அவர் பொங்கி எழுந்து கழுகுமலை கள்ளனாக மாறி அவர்களை பழி வாங்குவதுதான் படத்தின் கதை.
இந்த படத்தில் சரண்ராஜ் நண்பராக கழுகு நடித்திருந்தது. வில்லன்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சொல்வது, காதலிக்கு தூது செல்வது, இறுதியில் நண்பனுக்காக உயிர் தியாகம் செய்வது என ஒரு தனி கேரக்டராகவே கழுகு நடித்திருந்தது. இதற்காக பயிற்சி அளிக்கப்பட்ட கழுகு நடிக்க வைக்கப்பட்டது. படப்பிடிப்பின் போது அதே கழுகு சரண்ராஜின் முகத்தில் கொத்தி அவர் சிகிச்சை பெற்ற சம்பவமும் நடந்தது .