கோவில் திருவிழாவில் பங்கேற்றதால் சலசலப்பு ; அழகான விளக்கம் கொடுத்த அன்னா பென்
மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான 'கும்பலாங்கி நைட்ஸ்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அன்னா பென். அதன்பிறகு அவர் நடித்த 'ஹெலன்' திரைப்படம் அவரை மிகப்பெரிய அளவில் பிரபலமாக்கியது. அந்த படம் தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. கடந்த 2024ல் சூரி நடிப்பில் வெளியான 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் மூலம் தமிழிலும் நுழைந்தார் அன்னா பென்.
இந்த நிலையில் சமீபத்தில் கொச்சியில் உள்ள தைக்கட்டு மகாதேவ கோவிலில் நடைபெற்ற திருவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் அன்னா பென். இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் இந்துக்களின் கோவில் திருவிழாவில் அவர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டது குறித்து சோசியல் மீடியாவில் பலர் விமர்சன கருத்துக்களை முன் வைத்தனர். அதேசமயம் அந்த விழாவிலேயே அன்னா பென் பேசும்போது இதற்கான அழகான விளக்கம் ஒன்றை அளித்து இருந்ததை பலர் கவனிக்க தவறி விட்டனர்.
அன்னா பென் மலையாள திரையுலகின் பிரபல கதாசிரியரான பென்னி நாயரம்பலம் என்பவரின் மகள் தான். அந்த நிகழ்வில் அன்னா பென் பேசும்போது, “என் அப்பாவின் பெயர் பென்னி நாயரம்பலம் என யாரிடம் நான் சொன்னாலும் நாயரம்பலம் என்பது இந்துக்களில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் குறிப்பிடும் பெயராயிற்றே என்று ஆச்சரியத்துடன் கேட்பார்கள். அதேபோல எனக்கு அன்னா என்று பெயர் வைத்தார்கள்.
பள்ளிக்கூடத்தில் அன்னா என்றால் அன்னபூரணியா என்று கேட்கும் அளவிற்கு என்னுடைய பெயர் ஒரு ஆர்வத்தை எப்போதுமே ஏற்படுத்திக் கொண்டிருக்கும். திரைத்துறைக்கு வந்தபிறகு என் தந்தையின் பெயரையும் சேர்த்து அன்னா பென் என வைத்துக் கொண்டேன். இந்த கேரள கலாசாரம் எல்லா மதங்களையும் ஒன்றிணைத்து தழுவி செல்லுமாறு தான் எங்களுக்கு கற்பித்துள்ளது” என்று கூறியுள்ளார்.