பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா
இயக்குனர் பாரதிராஜா திரைப்படத்திற்கு வந்ததே நடிகராகத் தான். ஆனால் நடிப்பு வாய்ப்பு கிடைக்காமல் போனதால் உதவி இயக்குனர் ஆகி பின்பு இயக்குனர் ஆனார். என்றாலும் அவரது நடிப்பு ஆர்வம் தீராமல் இருந்ததால் அவரது படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தார். 'கல்லுக்குள் ஈரம்' படத்தில் அவராகவே நடித்தார். சுமார் 50 படங்களுக்கு மேல் நடித்து விட்டார் பாரதிராஜா.
பாரதிராஜா பற்றி இன்னும் ஒரு அறியப்படாத முகம் அவர் ஒரு டப்பிங் கலைஞர் என்பது. 'நிறம் மாறாத பூக்கள்' படத்தில் விஜயன் நடித்த போது அவரது குரலில் மலையாள வாசனை இருந்ததால் பாரதிராஜாவே அவருக்கு டப்பிங் பேசினார். காதல் வழிந்து ஓடும் அந்த படத்தின் வசனங்கள் இப்போதும் ரசிக்கப்படுகிறது.
'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் தியாகராஜனை வில்லனாக அறிமுகப்படுத்தினார். ஆனால் தியாகராஜனின் குரல் ஒரு மீனவ சண்டியரின் குரலாக இல்லை. இதனால் அவருக்கும் பாரதிராஜாவில் டப்பிங் பேசினார். 'வேதம் புதிது' படத்தில் சில காரணங்களால் நிழல்கள் ரவி டப்பிங் பேச முடியாததால் அதற்கும் பாரதிராஜாவே பேசினார்.
இயக்குனர் மணிவண்ணனை 'கொடி பறக்குது' படத்தில் வில்லனாக அறிமுகப்படுத்தினார். மணிவண்ணனின் நையாண்டித்தனமான குரல் வில்லன் கேரக்டருக்கு பொருத்தமாக இல்லாததால் அதற்கும் பாரதிராஜாவே டப்பிங் பேசினார்.