அது போன மாசம், இது இந்த மாசம்…விஜய் ரசிகர்களின் 'உருட்டு'
தமிழ் சினிமாவில் ஒரு நடிகருக்கும் மற்றொரு நடிகருக்கும் இடையில் போட்டி, பொறாமை இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டார்கள். ஆனால், அவர்களது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கண்டபடி சண்டை போட்டுக் கொள்வார்கள்.
சமூக வலைத்தளங்கள் வளர்ச்சியடைந்த கடந்த பத்து, பதினைந்து வருடங்களில் விஜய், அஜித் ரசிகர்கள் ஆகியோருக்கு இடையில்தான் இப்படியான சண்டை அதிகமாக இருந்தது. ஆனால், விஜய் அரசியலுக்குள் நுழைந்த பிறகு அவரது ரசிகர்கள் மாறுவார்கள் என்று பார்த்தால் இன்னும் மாறவில்லை.
பொங்கலை முன்னிட்டு ஜனவரி 9ம் தேதி 'ஜனநாயகன்' படம் வெளிவருவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' படம் ஜனவரி 14ல் வெளியிடுவதாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர் முன்னதாக வெளியிட முடிவெடுத்து ஜனவரி 10ம் தேதிக்கு மாற்றினார்கள். இது விஜய் ரசிகர்களை கோபப்படுத்தியது. 'பராசக்தி' படம் பற்றி சமூக வலைத்தளங்களில் தாறுமாறாக எழுத ஆரம்பித்தார்கள்.
'ஜனநாயகன்' நீதிமன்ற விவகாரத்தால் வராமல் போகவே அந்தப் கோபம் அதிகமாக ஆரம்பித்தது. சிவகார்த்திகேயனையும், படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவையும் கடும் சொற்களால் விமர்சித்தார்கள். அது படத்தின் வரவேற்பையும் பாதித்தது.
இந்நிலையில் நாளை வெளியாக உள்ள சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் 'தாய் கிழவி' படத்தில் விஜய்யின் தவெக கட்சி பற்றி ஒரு வசனம் இடம் பெற்றிருக்கிறது. அது டிரைலரிலும் வந்துள்ளது. தங்கள் வீட்டில் உள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்சி என ராதிகாவின் மூத்த மகன் சிங்கம்புலி பேசும் போது அவரது தம்பி பாலசரவணன், “விஜய் கட்சி, தவெக” என சொல்லுவார்.
நேற்று நடைபெற்ற பிரிமியர் காட்சியில் அந்த வசனம் படத்தில் வரும் போது விஜய் ரசிகர்கள் தியேட்டர்களில் கைதட்டி ரசிக்கிறார்கள். போன மாசம் சிவகார்த்திகேயனை வறுத்தெடுத்த விஜய் ரசிகர்கள் இந்த மாசம் வாழ்த்த ஆரம்பித்துள்ளார்கள்.