'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா
நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகா நடித்த 'தாய் கிழவி' நாளை ரிலீஸ் ஆகிறது. முன்னதாக இந்த படத்தின் சிறப்பு காட்சி சென்னையில் நடந்தது. பல சினிமா விஐபிகள் இதில் கலந்துகொண்டனர். படம் முடிந்தவுடன் அக்கா ராதிகாவை கட்டி பிடித்து பாராட்டி, கண்ணீர் வீட்டு அழுதார் தங்கையும் நடிகையுமான நிரோஷா. அவரிடம் பேசினோம்.
'தாய் கிழவி' படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்ததும் எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அக்காவை கட்டிபிடித்து பாராட்டினேன். என்னை அறியாமல் கண்ணீர் விட்டு கதறிவிட்டேன். காரணம், எங்களுக்கு என் அம்மா நினைவுக்கு வந்தார். அந்த படத்தில் பல காட்சிகளில் அக்கா வடிவில் அம்மாவை பார்த்தேன். பல சமயங்களில் பெண்கள் தன்னம்பிக்கையாக இருக்க வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும். யாரையும் சார்ந்து இருக்க கூடாது.
நமக்காக சேர்த்து வைக்க வேண்டும். நமக்காக நேரம் செலவழிக்க வேண்டும் என்று அவர் எங்களிடம் பேசியிருக்கிறார். படத்தில் அப்படிப்பட்ட கருத்தும் சொல்லப்படுகிறது. அதனால், உணர்ச்சி வயப்பட்டுவிட்டேன். தவிர, படத்தில் அவ்வளவு நகைச்சுவை காட்சிகள், அதைகைதட்டி சிரித்து மகிழ்ந்தேன். ரொம்ப நாளைக்குபின் தியேட்டரில் அவ்வளவு சிரிப்பு சத்தம். அக்காவின் நடிப்பு பற்றி சொல்ல வேண்டாம்.
'ஜீன்ஸ், கிழக்கு சீமையிலே' தொடங்கி பல படங்களில் நடிப்பில் மிரட்டியவர். இந்த படத்தில் தாய்கிழவியாக சிறப்பாக நடித்துள்ளார். இந்த மாதிரி நடிக்க ஆட்கள் இல்லை. சிவாஜி, எங்கள் தந்தை எம்.ஆர்.ராதா, ஆச்சி மனோரமா, கமல்ஹாசன் வரிசையில் அக்காவும் இருக்கிறார் என்பதை இந்த படம் நிரூபித்துள்ளது. இப்படிப்பட்ட நல்ல படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன், இயக்குனர் சிவகுமார் முருகேசனுக்கு நன்றி. இந்த ஆண்டின் சிறந்த படமாக மட்டுமல்ல, இன்னும் பல ஆண்டுகள் இந்த படம் பேசப்படும்.
அக்கா ராதிகாவுக்கு தேசியவிருது கிடைக்கவில்லையே என்று பலரும் ஆதங்கப்படுகிறார்கள். எனக்கும் அது இருக்கிறது. இந்த படத்தில் கிடைக்கும். அப்படி விருது கொடுத்தால் அந்த விருதுக்குதானே பெருமை. இன்னமும் தாய்கிழவி பட பாதிப்பில் இருந்து மீளவில்லை' என்கிறார். பொதுவாக தமிழ் படங்களில் சிறப்பு காட்சிகளில் கலந்து கொள்ளாத நடிகர் சூர்யா, ஜோதிகா தம்பதியினரும் நேற்று தாய்கிழவி பார்த்துவிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளனர்.