ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன்
ஜெயிலர் 2 படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக நடிக்க இருக்கும் படத்தை டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார். வழக்கமான ஆக் ஷன் கதைகளை தவிர்த்து ஜனரஞ்சகமான குடும்ப படமாக இதன் கதை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதில் ரஜினிகாந்த் உடன் யார் யார் இணைந்து நடிக்கிறார்கள் என்கிற தகவல் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் தற்போது மலையாள இயக்குனரும் நடிகருமான பசில் ஜோசப் நடிக்க இருக்கிறார் என்கிற ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
மலையாள திரை உலகில் கோதா, மின்னல் முரளி உள்ளிட்ட படங்களை இயக்கிய பசில் ஜோசப் சமீப காலமாக கதாநாயகனாக நடித்து வருகிறார். மலையாளத்தில் மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களிடமும் ஓரளவு நன்கு அறிமுகமாகியுள்ளார். அதேசமயம் இன்னொரு பக்கம் கடந்த சில வருடங்களாகவே ஜெயிலர், வேட்டையன், கூலி தற்போது உருவாகி வரும் ஜெயிலர் 2 என ரஜினிகாந்த் நடிக்கும் படங்களில் மலையாள நட்சத்திரங்கள் தொடர்ந்து இடம் பிடிப்பது வாடிக்கையாக்கி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அது மட்டுமல்ல இந்த படத்தில் நடிகை பிரியங்கா மோகனும் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இவர் சிபி சக்கரவர்த்தி இயக்கிய டான் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.