சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில்
நடிகர் சமுத்திரக்கனி இப்போது தமிழ், தெலுங்கில் முன்னணி குணச்சித்திர, வில்லன் நடிகராக நடித்து வருகிறார். அவர் முதல்முதலாக 'தடயம்' என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். 1990களில் ஆந்திராவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை மையமாக வைத்து கிரைம் திரில்லராக தடயம் உருவாகி உள்ளது. நவீன்குமார் பழனிவேல் இயக்கி உள்ளார்.
இது குறித்து பேசிய சமுத்திரக்கனி, ''42க்கும் அதிகமான படங்களில் போலீசாக நடித்துள்ளேன். முதன்முறையாக நடித்துள்ள வெப்சீரியசிலும் போலீஸ் வேடம்தான். 69 கொலைகள் செய்தவனுக்கு ஆதரவாக இருப்பது மாதிரி தெரிந்தாலும், கதை பல விஷயங்களை பேசுகிறது. சமீபகாலமாக தெலுங்கு சினிமாவில் அதிகம் நடிக்கிறேன். அங்கே சொகுசாக இருக்கிறேன். ஹீரோ லேட்டாக வருவார்கள். சீக்கீரம் போய்விடுவார்கள். என்னை மாதிரியான நடிகர்களுக்கு அதிக வேலை இருக்காது. ஆனால், இந்த வெப்சீரியஸ் படப்பிடிப்பில் கடும் வேலை. அதற்கான பலன் கிடைத்துள்ளது.
ஷிவதாவும் போலீஸ் ஆக நடித்துள்ளார். கருடன் படத்துக்குபின் என்னுடன் மீண்டும் நடித்துள்ளார். அவர் இன்னும் உயரத்துக்கு செல்வார். செங்கல்பட்டு அருகே இந்த படப்பிடிப்பு நடந்தது. படக்குழுவினர், உதவி இயக்குனர்கள் அங்கேயே வீடு எடுத்து தங்க படவேலைகளை பார்த்தனர். நான் படம் இயக்கி சில ஆண்டுகள் ஆகிவிட்டது. 'வினோதய சித்தம், ப்ரோ' படங்களுக்குபின் நடிப்பில் கவனம் செலுத்தினேன். ஆனால், இப்போது 'ஸ்கூல் பஸ்' என்ற படத்தை இயக்கிவிட்டேன். விரைவில் ரிலீஸ் ஆகிறது, அதற்கான அறிவிப்பு வரும். நான் நடித்தாலும், இயக்குனர் என்பதை மறக்கவில்லை. அதற்கான பணிகள் நடந்துகொண்டுதான் இருக்கிறது'' என்றார்.