பிளாஷ்பேக்: புரட்சி நடிகரின் படத்தில், புலியுடன் சண்டையிட்ட புரட்சிப் பெண் திரைக்கலைஞர்
“ராஜகுமாரி” திரைப்படத்தின் மூலம் நாயகனாக நடிக்க ஆரம்பித்த மக்கள் திலகம் எம் ஜி ஆர், தொடர்ந்து “மருதநாட்டு இளவரசி”, “சர்வாதிகாரி”, “மர்மயோகி”, “மதுரை வீரன்”, “சக்கரவர்த்தி திருமகள்”, “மகாதேவி”, “மன்னாதி மன்னன்”, “ராஜா தேசிங்கு”, “விக்கிரமாதித்தன்” என ராஜா ராணி கதைகளில் ஒருவிதமாகவும், “அலிபாபாவும் 40 திருடர்களும்”, “குலேபகாவலி”, போன்ற “ஆயிரத்து ஓர் இரவுகள்” என்ற அரபு நாட்டு கதைகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ராஜா ராணி கதைகளில் வேறுவிதமாகவும் நடித்து, வெகுஜன மக்களின் மனங்களில் ஒரு சாகஸ நாயகனாக, புரட்சி நடிகராக உயர்வு பெற்றிருந்த நிலையில், எம் ஜி ஆரின் நடிப்பில் வெளிவந்த மற்றுமொரு அரேபியக் கதையின் பின்னணியைக் கொண்ட திரைப்படமாக வெளிவந்த திரைப்படம்தான் “பாக்தாத் திருடன்”.
பொதுவாகவே எம் ஜி ஆரின் திரைப்படங்கள் மற்ற திரைப்படங்களைக் காட்டிலும் அதிக பொருட் செலவைக் கொண்ட திரைப்படங்களாகவே அமைந்திருக்கும் என்பது சினிமாவை நேசிக்கும் அனைவரும் அறிந்த ஒன்று. அதுபோலத்தான் இந்தப் படத்திலும் ஒவ்வொரு காட்சிக்கும் புதிதாக 'செட்' போடவேண்டும் என எம் ஜி ஆர் தரப்பிலிருந்து கேட்டுக் கொள்ள, அதன்படியே அதிக பொருட்செலவு செய்து, தயாரித்து வெளியிட்டிருந்தனர் தயாரிப்பு தரப்பினர் இந்த “பாக்தாத் திருடன்” திரைப்படத்தையும்.
எம் ஜி ஆருடன் நடிகை வைஜெயந்திமாலா இணைந்து நடித்த ஒரே திரைப்படம் என்ற முக்கியத்துவம் பெற்ற திரைப்படமாகவும் பார்க்கப்படும் இந்த “பாக்தாத் திருடன்” திரைப்படத்தில் எம் என் நம்பியார், எஸ் ஏ அசோகன் ஆகியோருடன் எம் ஜி ஆர் மோதும் வாள் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்திருந்தாலும், படத்தில் புலியுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சியும் இடம் பெற்றிருந்தது. ஆனால் படத்தில் புலியுடன் சண்டையிட்டது படத்தின் நாயகன் எம் ஜி ஆர் அல்ல.
பின்னாளில் வெளிவந்த எம் ஜி ஆரின் “விவசாயி”, “மாட்டுக்கார வேலன்” போன்ற திரைப்படங்களில் எம் ஜி ஆரின் அம்மாவாக நடித்திருந்தவரும், அதன் பின்னர் அடுத்த தலைமுறை நாயகர்களான கமல்ஹாசனின் “மைக்கேல் மதன காம ராஜன்” திரைப்படத்தில் நடிகை ஊர்வசியின் பாட்டியாகவும், விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த “வானத்தைப்போல” திரைப்படத்தில் விஜயகாந்தின் பாட்டியாகவும் நடித்து, தலைமுறைகளைக் கடந்த ஒரு தரமான நடிகையாகப் பார்க்கப்பட்ட நடிகை எஸ் என் லட்சுமிதான் இந்தப் படத்திலும் எம் ஜி ஆரின் அம்மாவாகவும், பாக்தாத் நாட்டின் ராணியாகவும் நடித்திருந்ததோடு, புலியுடன் சண்டையிடும் ஓர் சண்டைக் காட்சியிலும் தத்ரூபமாக நடித்திருப்பார்.
நிஜ வாழ்வில் பூனைக்கே பயப்படும் நடிகை எஸ் என் லட்சுமி, புலியுடன் மோதும் இந்த சண்டைக் காட்சியைப் பார்த்த எம் ஜி ஆர், படத்தின் கதாநாயகன் நானா? அல்லது அந்த இளம் பெண்ணா? என வேடிக்கையாக கேட்கும் அளவிற்கு எம் ஜி ஆரையே ஈர்த்திருந்தது அந்த சண்டைக் காட்சி. “சதர்ன் மூவீஸ்” தயாரிப்பில், இயக்குநர் டி பி சுந்தரம் இயக்கத்தில் 1960ம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு வெற்றித் திரைப்படமாகவே அமைந்திருந்தது இந்த “பாக்தாத் திருடன்”.