எனக்கு நட்டம் தான், துரந்தர் 2 படத்தில் நடிக்காதது குறித்து அனில் கபூர் விளக்கம்
கடந்த டிசம்பர் மாதம் பாலிவுட்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் துரந்தர். 1300 கோடிகளுக்கு மேல் வசூலித்த இந்த படத்தை ஆதித்யா தர் இயக்கியிருந்தார். ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்க, முக்கிய வேடத்தில் அக்ஷய் கண்ணா, சஞ்சய் தத், மாதவன் ஆகியோர் நடித்திருந்தனர். முதல் பாகம் வெளியான நான்கே மாதங்களில் இந்த படத்தின் இரண்டாம் பாகமான துரந்தர் 2 வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தன்னை அழைத்ததாகவும் ஆனால் என்னால் அதில் நடிக்க முடியவில்லை என்றும் சமீபத்திய பேட்டி ஒன்று நடிகர் அனில் கபூர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “இயக்குனர் ஆதித்யா தர் இந்த படத்தில் கேமியோ கதாபாத்திரம் ஒன்றில் நடிக்க வேண்டும் என்று கேட்டார். எனக்கும் அது பிடித்திருந்தது. அதேசமயம் அவர் கேட்ட தேதிகளை நான் ஏற்கனவே வேறு ஒரு படத்திற்கு ஒதுக்கி இருந்தேன். சினிமாவில் நான் நானாக இவ்வளவு நாள் நிலைத்து நிற்பதற்கு காரணம் வெறும் திறமையால் மட்டும் அல்ல. தொழிலை சரியாக செய்ய வேண்டும் என்கிற காரணத்தினால் தான். அதனால் தான் ஆதித்யாவிடம் எனக்கு இந்த படம் பிடித்திருக்கிறது, ஆனால் ஏற்கனவே ஒப்புக்கொண்ட வேலை இருக்கிறது. எனக்கு இது நட்டம் தான். ஆனாலும் ஓகே” என்று கூறினாராம் அனில் கபூர்.