உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆன்லைன் மோதல், ரசிகர்கள் சண்டை வேண்டாம் - பவன் கல்யாண் அட்வைஸ்

ஆன்லைன் மோதல், ரசிகர்கள் சண்டை வேண்டாம் - பவன் கல்யாண் அட்வைஸ்


சமூக வலைத்தளங்களின் பக்கம் போலே சினிமா நடிகர்களின் ரசிகர்கள் போடும் சண்டைகளைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது. சமயங்களில் தரக்குறைவான வார்த்தைகளில் அந்த சண்டை இருக்கும். கடந்த சில வருடங்களாக அனைத்து மொழி சினிமாவிலும் இது போன்ற சண்டைகள் வாடிக்கையாகிவிட்டது.

தமிழ் சினிமாவில் விஜய், அஜித் ரசிகர்கள் இடையேதான் இந்த சண்டை அதிகம் இருக்கிறது. தெலுங்குப் பக்கம் போனால், அங்கு நிறைய முன்னணி ஹீரோக்கள் இருப்பதால் சண்டைகளும் அதிகம் இருக்கும்.

ஆந்திர துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் நடித்து மார்ச் 19ல் வெளியாக உள்ள 'உஸ்தாத் பகத்சிங்' படத்தின் முன் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. அப்போது இந்த சண்டைகள் குறித்து ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துள்ளார் பவன் கல்யாண்.

அவர் பேசுகையில், “ஒவ்வொரு படமும் வெற்றி பெற வேண்டும் என உண்மையில் விரும்புகிறேன். அந்த வெற்றிப் படங்களில் என்னுடைய படமும் ஒன்றாக இருக்க வேண்டும். ஆன்லைன் மோதல், ரசிகர்களுக்கு இடையேயான சண்டை ஆகியவை இல்லாமல் ரசிகர்கள் அவர்களது அபிமான ஹீரோக்களின் படங்களைப் பார்த்து ரசிக்க வேண்டும்.

திரையுலகத்திற்கு இன்னும் நிறைய ஹீரோக்கள் வர வேண்டும். அதிகமான படங்கள் வந்தால்தான், சினிமாவை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வாழ முடியும்.

ஒவ்வொரு ஹீரோவும் வருடத்திற்கு ஒரு சில படங்களில் மட்டும்தான் நடிக்க முடியும். அரசியலில் இருப்பதால் என்னால் ஒன்றிரண்டு படங்களில் நடிப்பதே பெரிய விஷயமாக உள்ளது. அனைத்து சினிமாவையும் பார்த்து அவற்றைக் கொண்டாடுங்கள்,” என கூறினார்.

இந்த விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குனர் ஹரிஷ் சங்கர், நடிகைகள் ஸ்ரீலீலா, ராஷி கண்ணா, நடிகர் பார்த்திபன் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !