வாசகர்கள் கருத்துகள் (1)
வயதாகி விட்டதால் பிழைப்புக்காக அந்த வார்த்தையை நம்பி சொல்லியிருப்பார். பெரிது படுத்த வேண்டாம். பிழைத்து விட்டு போகட்டும். பாவம்.
பவன் கல்யாண் நடித்து நாளை வெளியாக உள்ள தெலுங்குப் படம் 'உஸ்தாத் பகத் சிங்'. இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்துள்ளார். இப்படத்தின் முன் வெளியீட்டு விழா இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய பார்த்திபன் அவரது சாதி பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார். அது கடும் விமர்சனத்திற்கு ஆளானது. தேவையே இல்லாமல் மேடையில் எதற்கு சாதிப் பெயரைக் குறிப்பிட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் எதிர்ப்புகள் எழுந்தது.
நேற்று காலையில் குரல் பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டு மன்னிப்பு கேட்டிருந்தார் பார்த்திபன். இருந்தாலும் அதில் சாதி பெயரைக் குறிப்பிட்டதற்கான காரணம் எதையும் அவர் சொல்லவில்லை. அதனால், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் வந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் நள்ளிரவில் எக்ஸ் தளத்தில் சாதி பெயரைக் குறிப்பிட்டது பற்றிய விளக்கத்தை எழுதியுள்ளார்.
அப்பதிவில், “சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ, வசதிக்காகவோ, அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.
அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி…. இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் சாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி சாதியை தலை மேல் வைத்துக் கொண்டாடுபவர்களை எனக்கே பிடிக்காது.
'இவன்' உட்பட பல படங்களில் / இடங்களில் நானே அதை வன்மையாகக் கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன்.
இவ்வளவு பேரின் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே நம்புவேனேத் தவிர, தவறியும் சாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன்.
என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பைத் தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள். உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக மிக ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பைப் பாதுகாப்பேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
வயதாகி விட்டதால் பிழைப்புக்காக அந்த வார்த்தையை நம்பி சொல்லியிருப்பார். பெரிது படுத்த வேண்டாம். பிழைத்து விட்டு போகட்டும். பாவம்.