சினிமா, அரசியல் சர்ச்சை : ஒரே நாளில் மன்னிப்பு கேட்ட மூவர்
தமிழகத்தில் சினிமாவையும், அரசியலையும் பிரிக்க முடியாது என்பார்கள். சம்பந்தமே இல்லாமல் எதையாவது பேசி சர்ச்சையில் சிக்கி, அதற்கு எதிர்ப்புகள் எழுந்த பின்பு மன்னிப்பு கேட்பதும் இங்கு வழக்கமாக நடப்பதுதான். ஆனால், ஒரே நாளில் சினிமா தொடர்பான சர்ச்சைகளில் சிக்கி மூவர் மன்னிப்பு கேட்டிருப்பது இதுவரையில் நடந்திருக்க வாய்ப்பில்லை.
நடிகர் ரஜினிகாந்த் பற்றி தவெக கட்சியைச் சேர்ந்த ஆதவ் அர்ஜுனா கடந்த வாரம் விமர்சித்துப் பேசினார். அதற்கு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து ஆதவ் அர்ஜுனா மன்னிப்பு கேட்டார்.
ஆளும் திமுக அரசை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், நடிகை நயன்தாராவைக் குறிப்பிட்டுத் தேவையில்லாமல் பேசி சர்ச்சையில் சிக்கினார். நடிகர் சங்கம் மற்றும் அரசியல் தலைவர்கள் சிலர் கண்டனம் தெரிவிக்க அதற்கு மன்னிப்பு கேட்டார் சிவி சண்முகம்.
இரு தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடைபெற்ற 'உஸ்தாத் பகத்சிங்' பட விழாவில் இயக்குனர், நடிகர் பார்த்திபன் அவரது சாதி பற்றி குறிப்பிட்டுப் பேசியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. நேற்றே மன்னிப்பு கேட்ட அவர், இன்று மீண்டும் மன்னிப்பு கேட்டார்.
ஒரே நாளில் இப்படி மூவர் மன்னிப்பு கேட்டது ஒரு பக்கம் இருந்தாலும், தேவையற்ற சர்ச்சையை உருவாக்கும் விதத்தில் இப்படிப் பேசுவது தேவையா ?, அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் இனியாவது நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்பதே பலரது கருத்தாக உள்ளது.