உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: உள்ளத்தை அள்ளித் தந்த 'சபாஷ் மீனா'

பிளாஷ்பேக்: உள்ளத்தை அள்ளித் தந்த 'சபாஷ் மீனா'


1958ம் ஆண்டு பி.ஆர்.பந்துலு இயக்கத்தில் வெளிவந்து வெள்ளி விழா கொண்டாடிய படம் 'சபாஷ் மீனா'. இதில் சிவாஜி, சரோஜாதேவி, பி.ஆர்.பந்துலு, மாலினி, சந்திரபாபு, எஸ்.வி.ரங்காராவ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். டி.ஜி.லிங்கப்பா இசை அமைத்திருந்தார்.

ஒரு பணக்காரர் தனது பொறுப்பில்லாத மகனை தனது பணக்கார நண்பன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். ஆனால் மகனோ தன் நண்பனை அந்த பணக்கார வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு அந்த வீட்டிலேயே இவர் வேலைக்காரராக சேர்ந்து கொள்வார். பணக்கார வீட்டு பெண்ணை நண்பரும், இவரும் காதலிக்க அதன் பிறகு நடக்கும் கலாட்டாக்கள்தான் படம்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இது இந்தியில் 'தில் தேவரா தீவானா' என்ற பெயரில் ரீமேக் ஆனது. அதையும் பி.ஆர்.பந்துலு இயக்கினார். அங்கும் வெற்றி பெற்றது. 'சிரிகுடுக்கா' என்ற பெயரில் மலையாளத்திலும், 'ஆலியா காலியா' என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் ஆனது.

படம் வெளியாகி 38 ஆண்டுகளுக்கு பிறகு இதே கதையை சற்று உல்டா பண்ணி, அதிகாரபூர்வமற்ற ரீமேக்காக 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தை இயக்கினார் சுந்தர் சி. பொறுப்பில்லாத மகன் கார்த்திக்கை அவரது தந்தை தனது நண்பன் வீட்டுக்கு அனுப்பி வைப்பார். அவர் தனது நண்பர் கவுண்டமணியை தனக்கு பதிலாக அனுப்பி வைத்து அதே வீட்டில் இவர் கார் டிரைவராக இருப்பார். பணக்காரர் மகள் ரம்பாவை காதலிப்பார், அதன்பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் 'உள்ளத்தை அள்ளித்தா' படத்தின் கதை. சபாஷ் மீனாவில் சிவாஜியின் நண்பர் சந்திரபாபு, உள்ளத்தை அள்ளித்தாவில் கார்த்திக்கின் நண்பர் கவுண்டமணி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !