உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ்

நிறைய சுமைகளை சுமக்காதீர்கள் : சமுத்திரகனி அட்வைஸ்

பாத்வே புரொடக்ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜுலு தயாரித்துள்ள படம் 'கார்மேனி செல்வம்'. ராம் சக்ரி இயக்கி உள்ளார். சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன், அபிநயா, லட்சுமி பிரியா சந்திரமவுலி, கார்த்திக் குமார், படவா கோபி, மதுமிதா, அர்ஜுனன், ஹரிதா பராகோட், கோதண்டம், கரண் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். யுவராஜ் தக்ஷன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மியூசிக்லௌட் ஸ்டுடியோ & டெக்னாலஜி நிறுவனம் இசையமைத்திருக்கிறது. வருகிற ஏப்ரல் 3ம் தேதி வெளிவருகிறது.

இதையொட்டி படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் சமுத்திரகனி பேசியதாவது: நிறைய உண்மைகளுடனும் நிறைய எளிமைகளுடனும் நம்மால் இந்த சமூகத்திற்கு ஏதேனும் ஒரு பங்களிப்பு இருந்திட வேண்டும், எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மிகவும் குறைவு. இப்படி இருப்பவர்களால் தான் உலகம் இயங்குகிறது என்று நான் நினைக்கிறேன்.

மற்றவர்களின் உதவியை எதிர்பாராமல் தற்சார்பு வாழ்க்கையை யார் வாழ்கிறார்களோ அவர்கள்தான் மிகப்பெரிய செல்வந்தர்கள். அவர்கள் தான் மிகவும் சந்தோஷமானவர்கள். இதை சொல்ல வருவது தான் இந்த 'கார்மேனி செல்வம்' படைப்பு. பணக்காரன் வேறு. செல்வந்தர் வேறு. பணக்காரன் பிரச்னைகளோடு இருப்பவன். செல்வந்தர் மிகவும் மகிழ்ச்சியுடன் இருப்பவர். உங்கள் அனைவரையும் செல்வந்தர் ஆக்குவது தான் இந்தப் படம். இந்த படைப்பில் இது போன்ற நிறைய விஷயங்களை பேசி இருக்கிறோம்.

'கார்மேனி செல்வம்' சாதாரண திரைப்படம் மட்டுமல்ல, நாங்கள் இல்லாமல் போகலாம், ஆனால் இந்த படைப்பு இருக்கும். உங்களுடன் எப்போதும் இருக்கும். நிறைய சுமைகளை தூக்காதீர்கள். இஎம்ஐ என்ற பெயரில் சுமைகளை சுமக்காதீர்கள். அதன்பிறகு நடக்கக்கூட முடியாது. அந்த சுமையை சிறிது சிறிதாக இறக்கி வைத்து விட்டு, கை வீசி சந்தோஷமாக நடந்து பாருங்கள். மகிழ்ச்சியை உணர்வீர்கள்” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !