நீண்ட இடைவெளிக்குப் பின் டிவி பக்கம் வந்த ரோஜா
தமிழ் சினிமாவில் மட்டுமல்லாது தெலுங்கிலும் 90களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரோஜா. சினிமவை விட்டு விலகுவதற்கு முன்பே தீவிர அரசியலில் இறங்கினார். 2004ல் நகரி, 2009ல் சந்திரகிரி தொகுதிகளில் ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2014 மற்றும் 2019ல் நகரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2022 முதல் 2024 வரை ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2024ல் நகரியில் போட்டியிட்டு தோற்ற பின்பு மீண்டும் சினிமா பக்கம் நடிக்க வந்துள்ளார். தெலுங்கில் நடிக்காமல் தமிழில் 'லெனின் பாண்டியன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அடுத்து 'அன்பே டயானா' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் விரைவில் வெளியாக உள்ளன.
சினிமா, அரசியல் என இரண்டிலும் மாறி மாறி பயணித்து வந்தாலும் அவ்வப்போது டிவி பக்கமும் போய்விட்டு வருவார். தெலுங்கு, தமிழ், கன்னட டிவி ஷோக்களில் நடுவராகக் பங்கேற்றுள்ளார். ஏழு வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழ் டிவி ஷோ ஒன்றில் நடுவராகப் பங்கேற்க உள்ளார்.
விஜய் டிவியின் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் 7வது சீசனில் ரோஜாவும் ஒரு நடுவர். இதற்கான முன்னோட்ட வீடியோ ஏற்கெனவே வெளியாகி உள்ளது. தமிழ் சினிமா, டிவி ஷோ என இந்தப் பக்கம் வந்தவர் மீண்டும் தெலுங்குப் பக்கமும் போவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.