சென்னையில் இன்று புதிதாகத் திறக்கப்பட்ட 2 தியேட்டர்கள்
சென்னையில் பழமை வாய்ந்த சில பல தியேட்டர்கள் அடுத்தடுத்து மூடப்பட்டு வருகின்றன. இருந்தாலும் புதிதாக சில மல்டிபிளக்ஸ் தியேட்டர்கள் திறக்கப்பட்டு அந்தக் குறையைத் தீர்த்து வைத்து விடுகிறார்கள்.
இந்திய அளவில் பிவிஆர் நிறுவனம் எண்ணற்ற மல்டிபிளக்ஸ் தியேட்டர்களை நாடு முழுவதும் நடத்தி வருகிறது. அந்நிறுவனம் 1700க்கும் மேற்பட்ட தியேட்டர்களை பல்வேறு நகரங்களில் நடத்தி வருகிறது. சினிபோலிஸ், கார்னிவல், ஏசியன் சினிமாஸ் என சில நிறுவனங்களும் இந்தியாவில் பிரபலமாக உள்ளன.
மூவி மேக்ஸ் என்று மல்டிபிளக்ஸ் தியேட்டர் நிறுவனம் இந்தியா முழுவதும் மும்பை, புனே, ஐதராபாத், நொய்டா உள்ளிட்ட நகரங்களில் சுமார் 79 தியேட்டர்களை நடத்தி வருகிறது. தற்போது சென்னையில், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் வால்டாக்ஸ் சாலையில் இன்று அவர்களது 2 புதிய தியேட்டர்களைத் திறந்துள்ளது.
வட சென்னை பகுதியில் செயல்பட்டு வந்த முக்கிய தியேட்டர்களான அகஸ்தியா, மகாராணி, ஸ்ரீபிருந்தா ஆகியவை மூடப்பட்டன. தற்போது வட சென்னையில் நவீன வசதிகளுடன் புதிதாக தியேட்டர்கள் திறக்கப்படுவது அப்பகுதி சினிமா ரசிகர்ளுக்கு மகிழ்வைத் தரும்.