உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளையராஜா சரிவர பேசுவது இல்லை : தம்பி கங்கை அமரன் ஆதங்கம்

இளையராஜா சரிவர பேசுவது இல்லை : தம்பி கங்கை அமரன் ஆதங்கம்

சென்னையில் நடந்த பருந்து பட விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் இயக்குனர், இசையமைப்பாளர் கங்கை அமரன். அந்த விழாவில் தனது அண்ணன் இளையராஜா குறித்து பல விஷயங்களை வெளிப்படையாக தெரிவித்தார்.

அவர் பேசியதாவது : பருந்து படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் ஆர்.அழகுமலை நான் இயக்கிய படங்களின் படப்பிடிப்பை சின்ன வயதில் பார்த்து இருக்கிறார். மதுரை சுற்றுவட்டாரத்தில் நான் அதிகம் படப்பிடிப்பு நடத்துவேன். நாம் வளர்ந்த, பழகிய ஏரியாவில் படப்பிடிப்பு நடத்துவது மனசுக்கு நெருக்கமாக இருக்கும்.

மதுரை, அழகர் கோயில், தேனியில் நான் சுற்றாத இடமே இல்லை. 8ம் வகுப்பு வரை தான் படித்தேன். பின்னர், அண்ணன் இசைக்குழுவில் இணைந்து பெண் குரலில் பாட ஆரம்பித்தேன். அந்த காலத்தில் ஹிட்டான பாடல்களை, கம்யூனிஸ்ட் கட்சி பாடமாக மாற்றி பாடுவோம். பின்னர், அண்ணன் இசையமைப்பாளர் ஆனவுடன் அவருடன் பயணித்தேன். அவர் கூடவே பல ஆண்டுகள் இருந்தேன்.

யு-டியூப்பில் இளையராஜா பாடல்களை தேடுகிறார்கள், நானும் நிறைய ஹிட் பாடல் கொடுத்து இருக்கிறேன். நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறேன். அதையும் தேட வேண்டும். நான் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் ஆகப் போகிறது. ஆனால், எனக்கு பின்னால் வந்த கே. பாக்யராஜ் 50வது ஆண்டை கொண்டாடிவிட்டார். அது எப்படி என தெரியவில்லை.

இப்போது அண்ணன் இளையராஜா வேறு மாதிரி இருக்கிறார். அவருடன் பேச முடிவதில்லை. அவரை பார்க்க சென்றார் பார்வையால் பேசிவிட்டு கிளம்பு என்கிறார். அவருடன் அண்ணன், தம்பியாக நேரத்தை செலவிட ஆசை. இப்போது இரண்டாவது சிம்பொனியை அவர் முடித்துவிட்டார். அதை நிறைவேற்றும்போது நான் இருக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளேன். இன்னமும் அவர் இசையிலே இருக்கிறார்.

இசை தவிர வேறு சிந்தனை இல்லை. லெனின் பாண்டியன் படத்தில் இயக்குனர் பாரதிராஜா நடிக்க வேண்டும். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட நான் நடிக்கிறேன். காலத்தை நாம் வெல்ல முடியாது. அந்த படத்தில் எனக்கு ஜோடி ரோஜா. அவருடன் படப்பிடிப்பில் கலாட்டா செய்து கொண்டே இருப்பேன்''.

இவ்வாறு கங்கை அமரன் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !