'ஜனநாயகன்' ரிலீஸ் எப்போது? அந்த 3 இயக்குனர்களும் பிஸியாமே?
'ஜனநாயகன்' படம் லீக் ஆகிவிட்டதால் அந்த படத்தை தயாரித்த கேவிஎன் நிறுவனத்துக்கு கடும் இழப்பு. அதை ஈடுகட்ட, அவர்களுக்கே மீண்டும் கால்ஷீட் கொடுத்து விஜய் மீண்டும் நடிக்கப்போகிறார். அந்த படத்தை லோகேஷ் கனகராஜ், அட்லி அல்லது நெல்சன் இயக்க வாய்ப்பு என்று சில நாட்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.
இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தால், ''இன்னமும் அவர் அதிகாரப்பூர்வமாக எதையும் சொல்லவில்லை. இப்போது நடிக்க வருகிறேன் என்று சொன்னால் அது தேர்தல் பிரசாரத்தை, ஓட்டு விகிதத்தை பாதிக்கும். எதிர்க்கட்சிகள் கிண்டல் செய்வார்கள். அவர் தேர்தலில் தோற்பது உறுதி. அதனால் மீண்டும் நடிக்கப்போகிறார் என்பார்கள். அதனால், அமைதி காக்கிறார். ஒருவேளை ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகி வெற்றி பெற்றுவிட்டால் அவர் நடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் நஷ்டஈடு தர வேண்டியது இல்லை. அவர் நடிப்பது ஜனநாயகன் ரிசல்ட்டை பொறுத்து இருக்கிறது.
விரைவில் ஜனநாயகனை ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது. ஏற்கனவே படம் 3 மாதம் லேட். இப்போது முழு படமும் லீக் ஆகிவிட்டது. தேர்தல் முடிவுகளுக்கு பிறகே தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப்பெற முடியும் என்பதால் அதன்பிறகே ரிலீஸ் ஆகும். இன்னமும் தாமதித்தால் அது இன்னும் ஆபத்து என படத்தின் தயாரிப்பாளரிடம் வினியோகஸ்தர்கள் பேசி வருகிறார்கள். இன்னும் சில நாட்களில் சென்சார் சான்றிதழை வாங்கவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.
மேலும், முன்பு போல அதிக விலைக்கு படத்தை வாங்க முடியாது. ஜனநாயகன் லீக் ஆனதால் எவ்வளவு வசூலிக்கும் என தெரியாது. ஆகவே, குறைந்த விலைக்குதான் படத்தை வாங்கி, ரிலீஸ் செய்வோம். பழைய வியாபாரத்தை மறந்திடுங்க என்று பல வினியோகஸ்தர்கள் கேவிஎன் நிறுவனத்திடம் பேசி வருகிறார்களாம். இதற்கிடையே, விஜயின் அடுத்த படத்தை இயக்க உள்ளதாக கூறப்படும் லோகேஷ் கனகராஜ் 'டிசி' எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அடுத்து 'கைதி 2', அல்லுஅர்ஜூன் படம் ஆகியவற்றை இயக்கப்போகிறார். அட்லி இப்போது அல்லு அர்ஜூன் படத்தை இயக்கி வருகிறார். 'ஜெயிலர் 2' படத்தை இயக்கி வரும் நெல்சன், அடுத்து கமல், ரஜினி நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். விஜய் உடனடியாக கால்ஷீட் கொடுத்தாலும் அவர்கள் படத்தை இயக்குற நிலையில் இல்லை'' என்கிறார்கள்.