பிளாஷ்பேக் : ஒரே படத்தில் உயரம் தொட்டுவிட்டு காணாமல் போனவர்
1989ம் ஆண்டு வெளியான படம் 'காதலென்னும் நதியினிலே'. இதில் ஒரு தலைராகம் ஷங்கர், பாண்டியன், சீதா நடித்திருந்தார்கள். எம்.கே.ஐ.சுகுமாறன் என்பவர் இயக்கி இருந்தார். மனோஜ் கியான் இசை அமைத்திருந்தனர். வர்கீஸ் மேத்யூ என்பவர் தயாரித்திருந்தார்.
இது ஒரு முக்கோண காதல் கதை. பணக்கார பெண்ணான சீதாவை உடன் படிக்கும் ஷங்கரும், பாண்டியனும் காதலிக்கிறார்கள். பாண்டின் அடிதடி பார்ட்டி, ஆனாலும் சீதாவை தீவிரமாக காதலிக்கிறார். அவருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். ஷங்கர் நடுத்தர குடும்பத்து நல்ல பையன், படிப்பில் கெட்டி, அமைதியானவர் அவரும் சீதாவை நேசிக்கிறார். இருவருமே தன்னை ஆழமாக நேசிப்பதை உணரும் சீதா, யாரை தேர்வு செய்வது என்று முடிவு செய்ய முடியாமல் தவிக்கிறார். கிளைமாக்சில் அவர் என்ன முடிவெடுக்கிறார் என்பதான் படத்தின் கதை.
படம் வெளிவந்தபோது மீடியாக்கள் படத்தை கொண்டாடியது. சுகுமாறனை பாரதிராஜா, பாலச்சந்தர் வரிசையில் வைத்து போற்றியது. படம் மிகப்பெரிய வெற்றியை பெறாவிட்டாலும், ஓரளவு வரவேற்பை பெற்றது. சுகுமாறன் அதன் பிறகு 'பந்தைய குதிரைகள்' என்ற படத்தை இயக்கினார். இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. 'பிரேம கோஷம்' என்ற தெலுங்கு படத்தை இயக்கினார். அதன்பிறகு அவர் படம் எதையும் இயக்கவில்லை. அவரைப் பற்றிய தகவல்கள் எதுவும் இல்லை.