உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லாரன்ஸ் ஆப் பஞ்சாப் : வெப் தொடரை வெளியிட அரசு தடை

லாரன்ஸ் ஆப் பஞ்சாப் : வெப் தொடரை வெளியிட அரசு தடை

பஞ்சாபை சேர்ந்த பிரபல தாதா லாரன்ஸ் பிஷ்னோய். பாடகர் சித்து மூஸ்வாலாவின் படுகொலை, சல்மான்கான் வீட்டில் துப்பாக்கிச்சூடு நடத்தியது, சல்மான்கானின் நண்பரும் மற்றும் மகாராஷ்டிர மாநில முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டது உள்பட பல்வேறு வழக்குகளில் லாரன்ஸ் பிஷ்னோய் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து கொண்டே தனது அடியாட்கள் மூலம் தொடர்ந்து வன்முறை குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், லாரன்ஸ் பிஷ்னோய் வாழ்க்கை சம்பவங்களை தழுவி, 'லாரன்ஸ் ஆப் பஞ்சாப்' என்ற வெப்தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. இது ஜீ5 ஓடிடி தளத்தில் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தொடரை வெளியிடக்கூடாது என்று லூதியானா எம்.பி. ராஜா வாரிங் பஞ்சாப் உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் “இந்த தொடர் சிறையில் உள்ள ரவுடியை மகிமைப்படுத்துவதாகவும், அவர்களின் செயலை நியாயப்படுத்துவதாவும் இருக்கிறது. இது இளம் பார்வையாளர்களைப் பாதிக்கக்கூடும்” என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நடந்து வரும் நிலையில் “இத்தொடரின் உள்ளடக்கத்தில் குற்றச்செயல்களை பெருமைப்படுத்தும் சாத்தியக்கூறுகள் இருப்பதால், சர்ச்சைக்குரிய வெப்தொடரை வெளியிட வேண்டாம் என்று ஜீ5 ஓடிடி தளத்துக்கு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் அறிவுறுத்தியது. இதையடுத்து வெப்தொடரின் வெளியீடு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

லாரன்சின் செயல்களை நியாயப்படுத்தி, அவரை புகழ்ந்து வந்த சுமார் 2600 இணையதள கணக்குகளை பஞ்சாப் அரசு தடை செய்தது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !