மலையாள நடிகர் சந்தோஷ் நாயர் சாலை விபத்தில் மரணம் : மனைவி கவலைக்கிடம்
மலையாளத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர நடிகராக நடித்து பிரபலமானவர் சந்தோஷ் நாயர். 1982-ல் 'இது ஞங்களுடே கதா' என்கிற படத்தின் மூலம் அறிமுகமான இவர், மம்முட்டி, மோகன்லால் உள்ளிட்ட பிரபல நடிகர்களுடன் பல படங்களில் இணைந்து நடித்துள்ளார். சமீபத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'மோகினியாட்டம்' திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், இன்று காலை திருவனந்தபுரத்திலிருந்து கோட்டயத்திற்குத் தனது இன்னோவா காரில் மனைவி ராஜலட்சுமியுடன் பயணித்தார் சந்தோஷ் நாயர்.. அவரே காரை ஓட்டிச் சென்றார். காலை 6:15 மணியளவில் அடூர் பகுதியில் எம்.ஜி. சாலையில் எதிரே வந்த லாரியும், சந்தோஷ் நாயரின் காரும் மோதி விபத்துக்குள்ளானது. கார் உருக்குலைந்த நிலையில், காரின் பாகங்களை வெட்டி எடுத்து கணவன் - மனைவி இருவரையும் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். சிகிச்சையின் போது ஏற்பட்ட மாரடைப்பால் சந்தோஷ் நாயர் காலமானார். அவரது மனைவியின் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.