ஆர்பி சவுத்ரி மரணம் : ரஜினி, கமல், சிரஞ்சீவி, மோகன்லால் திரையுலகினர் இரங்கல்
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரி. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் 99 படங்களை தயாரித்துள்ளார். விரைவில் 100வது படத்தை தயாரிக்க திட்டமிட்ட நிலையில் ராஜஸ்தானில் திருமண நிகழ்வுக்காக சென்றவர் அங்கு நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தார். தமிழ் சினிமாவில் பல புதுமுக இயக்குனர்கள், நடிகர்களுக்கு வாய்ப்பளித்தவர் ஆர்பி சவுத்ரி. இவரது மரணம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. சவுத்ரி உடல் இன்று தான் சென்னை கொண்டு வரப்படுகிறது. திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். பல திரைப்பிரபலங்கள் ஜீவா அவரது குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் சொல்லி வருகின்றனர்.
நடிகர் ரஜினிகாந்த்
என் அருமை நண்பர் சூப்பர் குட் ப்லிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி தலை சிறந்த தயாரிப்பாளர். அருமையான மனிதர். எத்தனையோ இளம் இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து திரையுலகை வாழவைத்தவர். அவருடைய அகால மரணச் செய்தி எனக்கு பேரதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிக்கிறது. அவர் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.
நடிகர் கமல்ஹாசன்
தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பாளர்களில் சிகரமாகத் திகழ்ந்த ஆர்.பி.சவுத்ரி, சாலை விபத்தில் நம்மைவிட்டுப் பிரிந்த செய்தி அதிர்ச்சியையும் சோகத்தையும் தருகிறது. சினிமாவில் புது முயற்சிகளுக்குத் தயங்காத துணிச்சல்காரர்; பலரை அறிமுகம் செய்தும் பலருக்குத் திருப்புமுனை ஏற்படுத்தியும் நிலைநிறுத்தியவர்; சாதிக்க விரும்பும் இளம் கலைஞர்களுக்குச் சரணாலயமாக இருந்தவர் இப்படி நம்மை விட்டு பிரிந்தது தாங்கவொண்ணாத் துயர். அன்புத் தந்தையை இழந்து வாடும் தம்பி ஜீவா, தம்பி ரமேஷ் மற்றும் குடும்பத்தாருக்கு என் மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி
தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியின் துயரமான மறைவு குறித்துக் கேள்விப்பட்டு, மிகுந்த மனவேதனை அடைந்தேன். பல ஆண்டுகளாக எனக்கு அவரைத் தெரியும்; அண்மையில், 'சூப்பர் குட் பிலிம்ஸ்' வாயிலாக எனது படமான காட் பாதர்-ல் அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பும் எனக்கு கிடைத்தது. எண்ணற்ற திறமையான இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் திரைப்பயணத்தை வடிவமைத்து, கணக்கிலடங்கா கதைகளுக்கு அவர் உயிரூட்டியுள்ளார். இந்தியத் திரையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பைச் சொற்களால் விவரிக்க இயலாது. இந்த ஈடுசெய்ய முடியாத இழப்பைத் தாங்கிக்கொள்ளும் மனவலிமையை அவரது குடும்பத்தினருக்கு அருளுமாறும், அவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இயக்குனர் விக்ரமன் கண்ணீர்
எத்தனையோ கனவுகளுடன் சினிமாவில் இயக்குனர் ஆகணும் என மெட்ராஸ் வந்து ரொம்ப கஷ்டப்பட்டு உதவி இயக்குனராக பணியாற்றி பின்னர் இயக்குனர் ஆகலாம் என பல கம்பெனிகளில் ஏறி இறங்கி, சாப்பாட்டிற்கே கஷ்டப்பட்டு போராடிய காலத்தில் சவுத்ரி சாரிடம் ஒரு கதை சொல்லி அது ஓகே ஆகி அப்படி உருவான படம் தான் ‛புது வசந்தம்'. இன்னைக்கு என் வீட்டிற்கு பெயரே புது வசந்தம் தான். இன்னைக்கு நான் நிம்மதியா சாப்பிடுறதே அவரால தான்... இன்னைக்கு அவர் இல்லை என நினைக்கும்போது கவலையாக உள்ளது. 100 படம் எடுக்க வேண்டும் என்பது அவரது கனவு. சூப்பர் குட் பிலிம்ஸில் நிச்சயம் 100வது படம் எடுப்பார்கள். ஆனால் அதை பார்க்க அவர் இல்லை என்பது வேதனையாக உள்ளது என கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
மலையாள நடிகர் மோகன்லால்
தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரியின் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். இந்தியத் திரையுலகின் மிகச்சிறந்த அத்தியாயங்களை உருவாக்கித் தந்த ஒரு மாபெரும் ஆளுமை அவர். 'கீர்த்தி சக்ரா' மற்றும் 'ஜில்லா' ஆகிய திரைப்படங்களின் மூலம் அவரோடு இணைந்து பணியாற்றிய வாய்ப்பைப் பெற்றதை நான் பெருமையாகக் கருதுகிறேன். அந்த நினைவுகள் என்றும் என் மனதில் நிலைத்திருக்கும். கதைகளையும், மனிதர்களையும் ஆழமாக நம்பியவர் அவர்; அந்த நம்பிக்கை எண்ணற்ற கலைஞர்களின் வாழ்க்கையையும், திரைப் பயணத்தையும் மாற்றியமைத்தது. அவரது மறைவு இந்தியத் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும். இந்த இக்கட்டான தருணத்தில், அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் இந்தப் துயரத்தைத் தாங்கும் வலிமையைப் பெற வேண்டுகிறேன்.