உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வினியோகஸ்தர் கொடுத்தும் பணத்தை வாங்க மறுத்தார் : ஆர்.பி.சவுத்ரியை பாராட்டும் லவ்டுடே இயக்குனர்

வினியோகஸ்தர் கொடுத்தும் பணத்தை வாங்க மறுத்தார் : ஆர்.பி.சவுத்ரியை பாராட்டும் லவ்டுடே இயக்குனர்

மறைந்த சூப்பர்குட் பிலிம்ஸ் உரிமையாளர் ஆர்.பி.சவுத்ரி குறித்து, அவர் தயாரிப்பில் விஜய் நடித்த லவ்டுடே படத்தை இயக்கிய பாலசேகரன் கூறியதாவது : எனக்கு லவ்டுடே முதல் படம். 1997ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் விஜய், சுவலட்சுமி, மந்திரா, ரகுவரன் நடித்தனர். முதலில் இந்த கதையை இயக்குனரும், விஜய் அப்பாவுமான எஸ்.ஏ.சந்திரசேகரனிடம் கூறினேன். அவர் சூப்பர்குட் தான் இந்த கதையை தயாரிக்க சரியான இடம் என்றார்.

இந்த கதையை கேட்டவுடன் சவுத்ரி படம் தயாரிக்க ஒப்புக் கொண்டார். கதை கேட்ட மறுநாளே எனக்கு அட்வான்ஸ் கொடுத்தார். பட வேலைகள் படபடவென நடந்தன. மற்ற தயாரிப்பாளர்களை விட சவுத்ரியிடம் சில தனிப்பட்ட நல்ல குணங்கள் இருந்தன. அவர் ஒரு இயக்குனரை நம்பிவிட்டால், மற்றவர்கள் என்ன சொன்னாலும், குறை சொன்னாலும் கேட்கமாட்டார். படப்பிடிப்பில் நடிகர்களை விட இயக்குனர் தான் முக்கியம் என்பார். படத்துக்காக எந்த பொருள் வாங்கினாலும் அதில் இயக்குனர் கையெழுத்து வேண்டும். அவர் கதைக்கு தேவை என்று சொன்னால் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் வேண்டாம் என்பார். பெரும்பாலும் படப்பிடிப்புக்கு வரமாட்டார். எப்போதாவது வந்தாலும் அரை மணி நேரத்தில் புறப்பட்டுவிடுவார். ஆனால், படப்பிடிப்பில் என்ன நடக்கிறது என்பது அவருக்கு எல்லாம் தெரியும்.

ஒரு இயக்குனர் சுதந்திரத்தில் தலையிடமாட்டார். இதை மாற்று, அதை அப்படி செய் என சொல்லமாட்டார். எந்த பிரச்னை வந்தாலும் இயக்குனருக்காக குரல் கொடுப்பார். பட்ஜெட் அதிகரிக்க கூடாது. செலவை சிக்கனமாக பண்ணுங்க என்பார். அவருக்கு பாடல் ரொம்ப பிடிக்கும். பாடல் பதிவில் சில விஷயங்களை சொல்வார். அப்போது கூட உங்கள் விருப்பபடி ட்யூன் தேர்ந்தெடுங்க என்பார். லவ்டுடே ஹிட் பாடல்கள் அவர் தேர்ந்தெடுத்த ட்யூன்தான். காதல் சுகமானது பாடல் அவருக்கு ரொம்ப பிடிக்கும்.

லவ்டுடே வெற்றி பெற்றபின் அவரை சந்தித்தேன். ஒரு இயக்குனரிடம் பேசினால், பழகினால் அவர் திறமை தெரியும், லவ்டுடே படத்தின் கிளைமாக்ஸ் பிடித்தது. அதனால் படம் தயாரித்தேன் என்றார். படம் ஹிட்டானவுடன் என்னை ஆபீசுக்கு அழைத்து, சம்பளம் போக, கூடுதலாக ஒரு லட்சம் பணம் கொடுத்தார். இன்னொரு விஷயத்தையும் சொல்கிறேன். லவ்டுடே சமயத்தில் அவர் தயாரித்த துள்ளாத மனமும் துள்ளும் ஹிட்டானது. அதை வாங்கிய ஒரு வினியோகஸ்தர் சார் எனக்கு கூடுதல் லாபம் கிடைத்துள்ளது என்று சொல்லி, ஒரு குறிப்பிட்ட தொகையை அவரிடம் கொடுக்க வந்தார். அவரோ வாங்க மறுத்து விட்டார். நான் படத்தை விற்றுவிட்டேன். அந்த லாபம் உங்களுக்குதான். அது உங்கள் பணம் என்று பெருந்தன்மையுடன் சொன்னார். எத்தனை பேருக்கு இந்த மனசு வரும்.

இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !