மஞ்சணத்தி : இளையராஜாவுடன் இணையும் மாரி செல்வராஜ்
இன்றைய இளம் இயக்குனர்கள் பலருக்கும் இளையராஜாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது அவர்களது கனவாக இருக்கிறது. சமீபத்தில் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், இளையராஜாவுடன் இணைந்து அவருடைய 10வது படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்.
இன்று இயக்குனர் மாரி செல்வராஜ் அவரது 6வது படமாக 'மஞ்சணத்தி' படத்தை அறிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.
இது குறித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்கள். இளையராஜாவுடன் இணைவது குறித்து மாரி செல்வராஜ் அந்த வீடியோவில், “இளையராஜா சார் கூட வேலை செய்யணும்கறது எனக்கு ஒரு கனவு. அவரை இதுவரைக்கும் நான் பார்த்தது கூட இல்லை. அவர் ஒரு தெய்வீகம். சின்ன வயசுல இருந்து அது தெய்வீகமாக கலந்து போன ஒரு விஷயம்.
ஏக்கம் இருக்கு, ஆசை இருக்கான்னு கேட்டா இருக்கு. அதுக்கு கரெக்ட்டான மெச்சூர்டான ஒரு இடத்துக்கு நான் வரணும். நான் இன்னும் பக்குவப்படணும்னு நினைக்கிறேன். ஒட்டு மொத்த இசையாவே கூடிய வாழ்க்கை போயி, ஒரு கதையை சொல்லி, அந்தப் படத்துக்கு அவரைப் பண்ண வைக்கிறதுக்கு என்கிட்ட பக்குவமான ஒரு ஸ்கிரிப்ட் வேணும்.
அப்ப நம்பிக்கையா போயி, நாம ஒண்ணுமே சொல்ல வேண்டாம். கதைய சொன்னா மட்டும் போதும், அவர் பண்ணி கொடுத்துடுவாரு, நாம ஓரமா உக்காந்து பார்க்கணும்,” என்று பேசியுள்ளார் மாரி செல்வராஜ்.
வீடியோவின் முடிவில் 'மஞ்சணத்தி… இளையராஜா…. மாரி செல்வராஜ்' என இளையராஜாவிடம் இருந்து எழுதி வாங்கி மகிழ்ந்திருக்கிறார் மாரி செல்வராஜ்.
இளையராஜா பேசுகையில், “உண்மையிலே நடக்கும் விஷயங்கள் நடக்கிறது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது,“ என்கிறார்.