உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி
துபாய், மலேசியா மற்றும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் கார் ரேசில் ஈடுபட்டு வந்த அஜித், இப்போது பிரான்ஸ் நாட்டில் நடக்கும் போட்டியில் இருக்கிறார். சமீபத்தில் அளித்த பேட்டியில் ‛‛கடந்த 3 ஆண்டுகளாக துபாயில் இருந்து கார் ரேஸ் போட்டிகளுக்கான ஏற்பாடுகளை செய்கிறேன். இப்போது ஐரோப்பாவில் இருக்கிறேன். கார் ரேஸ் தொடரும். அடுத்த ஆண்டுக்கான பயண திட்டமும் ரெடி'' என கூறியிருக்கிறார்.
இந்த பேட்டி அஜித் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவர் சினிமாவில் நடித்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது. குட் பேட் அக்லி-க்கு பின் நடிக்கவில்லை. அடுத்து அவரை வைத்து படம் இயக்க ஆதிக் ரவிச்சந்திரன், சிவா, விஜய் உட்பட பலர் தயாராக இருந்தும், அவரை வைத்து படம் தயாரிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் ரெடியாக இருந்தும், அஜித் சம்பளத்தை குறைக்க மறுப்பதால் அவர் படம் தொடங்கப்படவில்லை.
அஜித் கேட்கும் 180 கோடி சம்பளம் கொடுத்தால் பல கோடி இழப்பு, அதுவும் பட ரிலீசுக்கு முன்பே ஏற்படும். அவர் மார்க்கெட்டுக்கு அந்த சம்பளம், அதிகம் என தயாரிப்பாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், அஜித் சம்பளத்தை குறைக்க மறுப்பதால் இழுபறி நீடிக்கிறது. அதனால், அவர் பட வேலைகளை மறந்து கார் ரேசில் கவனம் செலுத்துகிறார் என கூறப்படுகிறது. இதனால் இப்போதைக்கு அவரின் அடுத்த படம் தொடங்குவது மாதிரி தெரியவில்லை இந்த ஆண்டும் படம் இருக்காதா என அவர் ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கிறார்கள்
இந்த ஒன்றரை ஆண்டுகளில் அவர் இரண்டு படங்களில் நடித்து இருக்கலாம். ஒரு படத்துக்கு நுாறு கோடி சம்பளம் என வைத்து கொண்டால் கூட இரு நுாறு கோடி வந்திருக்கும். ரேஸ் மீதான தனது பேஷனால் அவர் பணத்தை பெரிதாக நினைக்காமல் ரேஸில் சாதிக்க துடிக்கும் அவரது ஆர்வத்தை பாராட்டவும் செய்கின்றனர். அதேசமயம் நீங்க ரேஸிற்கு போங்க, ஆண்டுக்கு ஒரு படமாவாது எங்களுக்கு கொடுங்க என ரசிகர்கள் வலைதளங்களில் கோரிக்கை வைப்பதையும் பார்க்க முடிகிறது.