உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : திரையிடப்பட்ட முதல் குத்துச் சண்டை போட்டி

பிளாஷ்பேக் : திரையிடப்பட்ட முதல் குத்துச் சண்டை போட்டி

இப்போதெல்லாம், உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, கால்பந்து போட்டிகளை தொலைக்காட்சிகளில் நேரடியாக பார்க்கும் வசதி வந்து விட்டது. ஆனால் 1950களில் இதற்கான வாய்ப்பு இல்லை. கிரிக்கெட்டும், கால்பந்தும் தமிழ்நாட்டில் அதிகம் அறிமுமாகாத காலத்தில் மக்கள் அதிகம் நேசித்த விளையாட்டு குத்துச் சண்டை. வட சென்னையில் இது குடும்ப விளையாட்டாக இருந்தது.

அடிக்கடி புகழ்பெற்ற குத்துச் சண்டை சாம்பியன்களை அழைத்து வந்து போட்டி நடத்துவார்கள். அப்படி நடந்த போட்டிகளில் முக்கியமானது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் உள்ள நேரு விளையாட்டு அரங்கம் அமைந்துள்ள இடத்தில் நடந்த ஒரு குத்துசண்டை போட்டி. இதில் இந்திய வீரார் தாராசிங்கும், ஹங்கேரி வீரர் கிங்காங்கும் மோதினார்கள். நடுவராக துருக்கி வீரர் அலிரேசா நடுவராக இருந்தார். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த போட்டியை அப்போதிருந்த பக்ஷிராஜா ஸ்டூடியோ குழுவினர் இரண்டு கேமராக்களை கொண்டு படமாக்கி வைத்திருந்தனர்.

அந்த காட்சிகளை பக்ஷிராஜா ஸ்டூடியோ தயாரித்த 'பொன்னி' என்ற படத்தோடு இணைத்து திரையிட்டார்கள். படம் சுமாராக இருந்தாலும் இந்த போட்டி காட்சிகளுக்காக படம் திரும்ப திரும்ப பார்க்கப்பட்டு வெற்றி பெற்றி பெற்றது. 'பொன்னி' படத்தை ஏ.எஸ்.ஏ.சாமி, சீனிவாசராவ் இயக்கினர். லலிதா, பத்மினி, துரைராஜ் நடித்திருந்தனர். இது 1953ம் ஆண்டு வெளிவந்தது. இதே போன்று 1960ம் ஆண்டு வெளிவந்த 'எங்கள் செல்வி' என்ற படத்திலும் இருவரின் குத்துச் சண்டை காட்சிகள் இடம்பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !