உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / குடும்பங்கள் கொண்டாடும் படங்களில் நடிக்க விருப்பம்: நடிகர் அன்பு தாசன் பளீச்

குடும்பங்கள் கொண்டாடும் படங்களில் நடிக்க விருப்பம்: நடிகர் அன்பு தாசன் பளீச்

'கல்யாண சமையல் சாதம்' என்ற வெப்சீரிஸில் துவங்கி மீசைய முறுக்கு, கோலமாவு கோகிலா, ஆதித்யா வர்மா, ஜோ, அமரன் உட்பட பல்வேறு படங்களில் திறமையை வெளிப்படுத்தி பன்முக நடிகராக உயர்ந்துள்ள அன்பு தாசன் நம்முடன் பகிர்ந்தது.

பிறந்து வளர்ந்தது தஞ்சாவூர். தந்தை தபால்துறை, தாய் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தனர். திண்டுக்கல்லில் பொறியியல் படித்தேன். பள்ளியில் இருந்தே நாடகம், பேச்சுப்போட்டிகளில் ஆர்வம் அதிகமாக இருந்தது.

சினிமாவிற்கு வர ஆசை இல்லை. தஞ்சை விமானப்படை தளத்திற்கு அருகே எங்களின் வீடு இருந்தது. சிறுவயதில் இருந்தே விமானங்களை பார்த்து வளர்ந்ததால் விமானப்படையில் சேர ஆசை அதிகமாக இருந்தது. அதற்காக தேர்வு எழுதியும் டெக்னிக்கல் பிரிவில் கிடைக்கவில்லை.

சென்னையில் ஒரு யு டியூப் சானலில் சவுண்ட் இன்ஜினியராக பணிபுரிந்து கொண்டே சீரியல், குறும்படங்களுக்கு டப்பிங் செய்யும் பணியை ஒன்றரை ஆண்டுகள் செய்தேன்.

பின் 'ஹிப்ஹாப் தமிழா' ஆதி நடித்த 'மீசைய முறுக்கு' படத்தில் நண்பன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் பின் 'கோலமாவு கோகிலா' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நேர்காணல் சென்றேன்.

அங்கு நயன்தாரா, யோகிபாபு, அனிருத் படத்தில் இருப்பது எனக்கு தெரியாது. அவர்கள் நடிப்பதையும், படம் பெரிய படம் என்பதையும் பின்னர் தெரிந்து கொண்டேன். இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின் ஆதித்யா வர்மா, ஓ மன பெண்ணே, ஜாம்பி, அமரன், ஜோ படங்களில் நடித்தேன்.

இதற்கு நடுவில் ஹிந்தியில் 'கில்லர் சூப்' வெப்சீரிஸில் நடித்தேன். யு டியூப்பில் நானே இயக்கி நடித்த 'கல்யாண சமையல் சாதம்' வெப்சீரிசிற்கு வரவேற்பு இருந்தது. அதில் இருந்து ஒரு கதையை நானே இயக்கி, ஹீரோவாக நடிக்கவுள்ளேன். அதற்கான பணிகள் நடந்து வருகிறது.

தெலுங்கில் வெளியான 'அர்ஜூன் ரெட்டி' படத்தை பார்த்தேன். அதில் நண்பர் கதாபாத்திரம் கடைசி வரை கதையை நகர்த்தி செல்லும். அதே கதாபாத்திரத்தில் நண்பராக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் விடக்கூடாது என நினைத்தேன். தமிழில் மறு ஆக்கமாக உருவான 'ஆதித்யா வர்மா' படத்தில் நான் நினைத்த நண்பர் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

'ஜோ' படத்தின் இயக்குனர் ஹரிஹரன் ராம், 'மீசைய முறுக்கு' படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர். அதனால் அவருடன் நல்ல நட்பு இருந்தது. அந்த படத்தின் கதையை முன்பே என்னிடம் தெரிவித்திருந்தார். நடிகர் ரியோ, டைரக்டர், கேமரா மேன் என நாங்கள் நீண்ட நாட்கள் நட்பு வட்டாரத்தில் இருந்தவர்கள். இந்த படத்தின் கல்லுாரி காட்சிகள் திண்டுக்கல்லில் நான் படித்த கல்லுாரியில் படமாக்கப்பட்டது. ஆனால் கன்னியாகுமரி, கேரளாவில் சூட்டிங் செய்தது போல இருக்கும்.

ஹிந்தி வெப் சீரிஸில் நடிப்பதற்கு முன்பு நேர்காணல் ஆறு மாதங்கள் நடந்தது. இந்த கதாபாத்திரத்திற்காக நாடு முழுவதும் 800 பேரிடம் நேர்காணல் நடந்தது. இதில் எல்லா மொழியில் நடிக்கும் பெரிய நடிகர்களுடன் நடித்த அனுபவம் புது விதமாக இருந்தது. ஹிந்தி எழுத, படிக்க தெரியும் என்பதால் ஹிந்தியில் மற்றொரு படத்தில் நடித்துள்ளேன்.

யு டியூப்களில் இயக்கி நடித்து வந்த எனக்கு, சினிமாவில் ஒரு படத்தை இயக்கி நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை ஹிந்தி வெப்சீரிஸ் சூட்டிங் ஸ்பாட்டில் கிடைத்தது. திரைக்கதையை எழுத கற்று கொள்வதற்கு நடிகர் நாசர் உதவியதால் புனேவில் படித்து முடித்து தற்போது கதையை எழுதி முடித்துள்ளேன்.

எங்கள் குடும்பத்தில் அதிகமாக பெண்கள் உள்ளனர். அதனால் என்ன படம் நடித்தாலும் அதிகபட்சம் குடும்பத்தில் உள்ள பெண்கள் முகம் சுளிக்காதவாறு படங்களை நடிக்க வேண்டும் என்பதில் கவனமாக உள்ளேன். குடும்பங்கள் கொண்டாடும் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !