உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : தோழிக்காக போராடிய பெண்

பிளாஷ்பேக் : தோழிக்காக போராடிய பெண்

இரண்டு ஆண்களின் நட்பை பற்றி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இப்போதும் வந்து கொண்டிருக்கிறது. முதன் முறையாக இரண்டு பெண்களின் நட்பை பற்றி பேசிய படம் 'தெய்வத்தின் தெய்வம்'. கே.எஸ்.கோபால கிருஷ்ணன் எழுதி, இயக்கி, தயாரித்தார். பிலஹரி எழுதி வார இதழில் வெளியான 'ஜடம்' என்ற சிறுகதையை அடிப்படையாகக் கொண்டது.

செல்வந்தர் (எஸ்.வி.ரங்கராவ்) மகள் கண்மணி(விஜயகுமாரி). உயர்கல்விக்காக சென்னைக்குச் செல்கிறாள்; அங்கு அன்னம் (குமாரி மணிமாலா) என்ற ஏழைப் பெண்ணைச் சந்தித்து அவளுடன் தோழியாகிறாள். விடுமுறையின்போது கண்மணி, அன்னத்தை தன் வீட்டுக்கு அழைத்து வருகிறாள். கண்மணியின் சகோதரர் (டி.கே.பாலச்சந்திரன்), அன்னத்தின் மீது காதல் கொள்கிறார். அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கிறார் கண்மணி.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக திருமணத்திற்குப் பிறகு சகோதரர் இறந்து விடுகிறார். தன்னால் தன் தோழிக்கு இப்படி ஒரு நிலை வந்து விட்டதே என்று வருந்துகிறார் கண்மணி. இதற்கிடையில் கண்மணி பாபுவை (எஸ். எஸ். ராஜேந்திரன்) திருமணம் செய்துகொள்கிறாள். ஆனால் அந்தத் திருமண வாழ்க்கை கசப்படைந்து, பாபு விவாகரத்து பெற நினைக்கிறார். ஆனால் கண்மணி அதற்கு உடன்படவில்லை. இதற்கிடையில், விதவையான தன் தோழி அன்னத்தை, பாபுவின் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க அவள் விரும்புகிறாள். இதன்பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

அதாவது தன் தோழிக்காக எல்லாம் செய்து 'தெய்வத்தின் தெய்வமாகும்' ஒரு பெண்ணின் கதை இது. ஓரளவு வரவேற்றை பெற்ற படம் இது. நாகேஷ், மனோரமவின் காமெடியும், ஜி.ராமநாதனின் இசையும் படத்தின் வெற்றிக்கு உதவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !