எஸ்.ஏ.சந்திரசேகர் - சமுத்திரகனியின் நான் கடவுள் இல்லை
நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரர். சமீத்திய சில படங்களின் தோல்விக்கு பிறகு மீண்டும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் “நான் கடவுள் இல்லை” . இதில் சமுத்திரகனி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக இனியா நடிக்க மற்றும் ஒரு துணிச்சல் மிக்க பெண் போலீஸ் அதிகாரியாக சாக்க்ஷி அகர்வால் நடிக்கிறார். வில்லனாக பருத்திவீரன் சரவணன் நடிக்கிறார்.
வழக்கறிஞராக எஸ்.ஏ.சந்திரசேகரும், ராணுவ அதிகாரி கதாபாத்திரத்தில் மயில்சாமியின் இரண்டாவது மகன் யுவனும், துணிச்சல் மிக்க இளைஞனாக அபி சரவணனும் அவருக்கு ஜோடியாக இளம் நாயகி ப்ரியங்காவும் நடிக்கிறார்கள். ரோகினி முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்ய, சித்தார்த் விபின் இசை அமைக்கிறார்.
படம் பற்றி எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது: குழந்தைகளை மையமாக வைத்து நான் இயக்கிய ஒரு குறும்படத்தை தற்செயலாக சமுத்திரகனி பார்த்தார். இதை பெரும் படமாக இயக்கும் எண்ணம் இருந்தால் தான் நடிப்பதாக தன் விருப்பத்தை தெரிவித்து இக்குறும்படத்தை பெரும்படமாக இயக்கும் எண்ணத்தை என்னூள் வித்திட்டார். சில நாட்களில் முழு நீள க்ரைம் த்ரில்லர் கதையாக மாற்றி அவரிடம் விரிவாக சொன்னேன், கதையை கேட்டவர் “சார் எத்தனை நாள் என்னுடைய டேட் வேண்டுமென்று” கேட்டதோடு இல்லாமல் தனது தமிழ், தெலுங்கு என தொடர் படப்பிடிப்புக்கு மத்தியில் இரவு பகல் பாராது ஒரே மூச்சில் இந்த படித்தில் நடித்துக் கொடுத்தார்” என்றார்.