உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழ்நாட்டில் மூடப்படும் தியேட்டர்கள் அதிகரிப்பு...

தமிழ்நாட்டில் மூடப்படும் தியேட்டர்கள் அதிகரிப்பு...

கொரோனா தாக்கத்தால் மற்ற தொழில்கள் மீண்டு எழுந்து வருகின்றன. ஆனால், சினிமா தொழில் நாளுக்கு நாள் மோசமான நிலையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது. எத்தனையோ சங்கங்கள் இருந்தாலும் யாரும் அதைப் பற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

நவம்பர் 10ம் தேதி மீண்டும் திறக்கப்பட்ட தியேட்டர்களுக்கு மக்கள் வரவில்லை. 'மாஸ்டர்' வெளியான பின் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே வந்தார்கள். அதன்பின் வெளியான வேறு எந்தப் படத்தையும் பார்க்க மக்கள் ஆர்வம் காட்டவில்லை.

சில வெள்ளிக்கிழமைகளில் படங்கள் வெளியான முதல் காட்சியே யாருமே வராததால் ரத்து செய்யப்பட்டதும் நடந்தது. சென்னை உள்ளிட்ட மாநகரங்களில் உள்ள மல்டிபிளக்ஸ் தியேட்டர்களுக்குக் கூட மக்கள் வராதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் மூடப்படும் தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள். மீண்டும் அவற்றை எப்போது திறப்பது என்பது கேள்விக்குறியாகி வருகிறது என்கிறார்கள்.

கடந்த வாரம் வெளியான படங்களுக்கும் அதே நிலைமைதான். மக்களிடம் கொரோனா அச்சம் என்று மட்டும் அதற்குக் காரணம் சொல்லிவிட முடியாது. பேருந்துகளில் கூட்டம், காய்கறி, மளிகைக் கடைகளில் கூட்டம், திருமணம் உள்ளிட்ட விழாக்களில் கூட்டம் என இருக்கும் நிலையில் தியேட்டர்களுக்குப் போவதை மக்கள் நிறுத்தியதன் காரணம் என்ன என்பதை திரையுலகினர் யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

பார்க்கிங் கட்டணம், பாப்கார்ன் விலை, காபி விலை ஆகியவற்றை வெளிமார்க்கெட்டில் இருக்கும் விலைக்கே நடைமுறைப்படுத்த வேண்டும். டிக்கெட் கட்டணங்களில் சலுகை அளிக்க வேண்டும். அதற்காக பல கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் உடனடியாக அவர்களது சம்பளத்தைக் குறைக்க வேண்டும். சிறிய படங்கள் வெளியான ஒரு மாதத்திற்குள் ஓடிடி தளங்களில் வெளியாவதைத் தவிர்க்க வேண்டும். படங்களுக்கு சரியான முறையில் விளம்பரம் செய்ய வேண்டும். இப்படி சில பல காரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.

மக்களை மீண்டும் வரவைக்காமல் போனால், அவர்கள் ஓடிடி தளங்களில் படங்களைப் பார்க்கப் பழகிவிடுவார்கள். புதிய படங்கள் கூட 30 மற்றும் 50 நாட்களில் அதில் பார்க்க முடியும் என்பதற்கு அவர்கள் பழகிவிட்டால் அவர்களை மீண்டும் தியேட்டர் பக்கம் வரவைக்க பிரயத்தனப்பட வேண்டும்.

உடனடியாக தங்களது ஈகோக்களை கைவிட்டு இருக்கும் முக்கிய சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தி இந்த மோசமான நிலைமையை சரி செய்ய வேண்டும் என பாதிக்கப்படும் பலர் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !