உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மாநாடு' சிங்கிள் : தாமதப்படுத்துகிறாரா யுவன்ஷங்கர் ராஜா?

'மாநாடு' சிங்கிள் : தாமதப்படுத்துகிறாரா யுவன்ஷங்கர் ராஜா?

வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மாநாடு'. இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட பணிகளுக்காகக் காத்திருக்கிறது. இப்படத்தின் டீசர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. டீசரில் யுவனின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலை ரம்ஜான் தினத்தன்று வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், அப்போது படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவின் அம்மா மரணமடைந்ததால் பாடல் வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள்.

இருந்தாலும் சிம்பு ரசிகர்கள் எப்போது முதல் சிங்கிளை வெளியிடப் போகிறீர்கள் என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள். அதற்கு பதிலளித்துள்ள படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, “பேரிடர் காலத்தில் தினமும் ஏதாவது இழப்புச் செய்தி காதில் விழுந்து கொண்டேயிருக்கிறது. யாரும் கொண்டாட்ட மனநிலையில் இல்லை. மருத்துவமனை வாசலிலும்.. கொரோனா பயத்திலும் இருக்கும் இச்சூழல் இரக்கமற்று #மாநாடு படத்தின் சிங்கிளை வெளியிடுவது மனிதமற்ற செயலாக இருக்கும். லாக்டவுன் முடியட்டும். கொஞ்சமாவது மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பட்டும். நண்பர்களே அதுவரைக்கும் மற்றவர்களுக்காக வேண்டியபடி காத்திருங்கள்,” என டுவீட் செய்துள்ளார்.

விசாரித்துப் பார்த்ததில் அந்த முதல் சிங்கிள் பாடலை இன்னும் யுவன்ஷங்கர் ராஜா முடித்துத் தரவில்லை என்று சொல்கிறார்கள். அவருடைய தாமதத்தால் தான் முதல் சிங்கிள் வெளியீடு தள்ளிப் போகிறதாம். சிம்புவின் ரசிகர்கள் யுவனிடம் கேட்டால் சீக்கிரம் தருவாரோ என்னமோ ?.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !