வில்லனாக நடிக்கிறேனா : மாதவன் பதில்
தமிழ்த் திரைப்பட இயக்குனரான லிங்குசாமி அடுத்து தெலுங்கில் ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் நடிகர் மாதவன் வில்லனாக நடிக்கப் போவதாக கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்தன. ஆனால், அவற்றிற்கு நடிகர் மாதவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
“லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க ஆசை தான். மீண்டும் அந்த மாஜிக்கை உருவாக்கவும் ஆசை, ஏனென்றால் அவர் அற்புதமான அன்பான மனிதர். நாங்கள் இருவரும் தெலுங்குப் படத்தில் இணைகிறோம், அதில் நான் வில்லனாக நடிக்கிறேன் என சமீபமாக உலவி வரும் செய்தியில் எந்தவிதமான உண்மையும் இல்லை,” என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மாதவனுக்கு தான் இயக்கிய 'ரன்' படம் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோ இமேஜைக் கொடுத்தவர் லிங்குசாமி. அந்தப் படம் வெளிவருவதற்கு முன்பு வரை சாக்லேட் பாய் இமேஜில் இருந்தவர் மாதவன். அடுத்து 'வேட்டை' படத்திலும் லிங்குசாமி, மாதவன் மீண்டும் இணைந்தனர்.
மாதவன் தற்போது 'ராக்கெட்ரி - தி நம்பி எபெக்ட்' என்ற படத்தை இயக்கி நாயகனாக நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது.