பழங்குடியின மாணவர்கள் கல்விக்காக நிதி திரட்டும் மாளவிகா மோகனன்
ADDED : 1571 days ago
மாளவிகா மோகனன் கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த பட்டம் போல படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்தார். தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் அறிமுகமானார். அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.
தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார். இதுதவிர பாலிவுட்டில் உருவாகும் வெப் தொடரில் ஷாகித் கபூருக்கு ஜோடியாக நடிக்கிறார்.அவ்வப்போது கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தும் மாளவிகா மோகனன், அந்த படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் மாளவிகா மோகனன் கேரளாவில் பழங்குடியினத்தைச் சேர்ந்த சிறுவர்கள் கல்வி கற்பதற்காக புதிய முயற்சியை தொடங்கியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, இது 2015 ஆம் ஆண்டில் நான் முதன்முதலில் வயநாட்டில் உள்ள பழங்குடி மக்களைக் காணச் சென்றது முதல் எனது இதயத்திற்கு மிக நெருக்கமாக இருந்து வந்தது. அவர்கள் கல்வி கற்கவும், அவர்களுக்கு போதுமான அங்கீகாரம் கிடைக்கவும் நான் உதவ விரும்புகிறேன். அடிப்படை சுகாதார மற்றும் கல்வி வாய்ப்பு கூட இல்லாமல் வறுமையில் வாடும் இந்த சமூகத்தினருக்கு நான் உதவ விரும்பினேன்.
கேரளாவில் வயநாட்டின் இந்தப் பழங்குடிப் பகுதிகளில் உள்ள குழந்தைகள் கல்வி கற்பதற்காக இந்த நிதியை திரட்ட முயற்சி செய்கிறேன். கேரளாவின் வயநாடு, ஒடப்பள்ளம் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன்கள் மற்றும் மடிக்கணினிகள் தேவைப்படுகிறது. லாக்டவுன் அமல்படுத்தப்பட்டதால் அங்குள்ள 22 பழங்குடி சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து படிக்க ஒரே வழி ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே. உங்கள் நன்கொடைகள் மூலம், ஒவ்வொரு பழங்குடி சமூகத்திற்கும் குறைந்தது 1 லேப்டாப் மற்றும் 1 ஸ்மார்ட்போனை நாங்கள் வழங்க முடியும், இது மொத்தம் 221 மாணவர்களுக்கு பயனளிக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு சாதனம் கிடைப்பதை உறுதி செய்வதே எங்கள் கனவு, ஆனால் 10 குழந்தைகளுக்கு 2 சாதனங்கள் கூட ஒரு சிறந்த தொடக்கமாகும் என்பதை நாங்கள் அறிவோம். நாங்கள் உங்களுக்கு நன்றிக் கடன்பட்டிருப்போம். நீங்கள் நன்கொடை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு ரூபாயும் பயனளிக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மாளவிகா மோகனனின் இந்த முயற்சிக்கு வரவேற்பு குவிகிறது.