ராதேஷ்யாம் - படப்பிடிப்புக்குத் திரும்பிய பிரபாஸ்
இந்தியத் திரையுலகத்தில் தற்போதைக்கு அதிகமான பிரம்மாண்டப் படங்களில் நடித்து வருபவர் பிரபாஸ் மட்டுமே. 'ராதேஷ்யாம், சலாயர், ஆதி புருஷ்' என மூன்று படங்களில் நடித்து வருகிறார். இவற்றில் 'ராதேஷ்யாம்' படம்தான் முதலில் வெளியாக உள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு கொரானோ இரண்டாவது அலையின் தாக்கத்திற்கு முன்பாக ஏப்ரல் மாதக் கடைசியில் நிறுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அதிகமாகியுள்ளதால் படப்பிடிப்பை இன்று முதல் ஆரம்பித்துள்ளார்கள்.
நாயகன் பிரபாஸ், நாயகி பூஜா ஹெக்டே இருவரும் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்களாம். இருவரும் பங்கு பெறும் சில காட்சிகளையும், எஞ்சியிருக்கும் ஒரே ஒரு பாடல் காட்சியையும் படமாக்குவதுடன் படப்பிடிப்பு நிறைவு பெறுகிறது. இப்படம் கடந்த நான்கு வருடங்களாகத் தயாராகி வருகிறது.
ராதாகிருஷ்ணகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை தெலுங்கு, ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியிட உள்ளார்கள். தமிழ் இசையமைப்பாளரான ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.