உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடி-யால் தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் நேரடி லாபம்

ஓடிடி-யால் தயாரிப்பாளர்களுக்குக் கிடைக்கும் நேரடி லாபம்

கொரோனா முதல் அலையின் காரணமாக ஓடிடி தளங்களில் திரைப்படங்களை நேரடியாக வெளியிடும் முறை வெற்றிகரமாக ஆரம்பமானது. சில முன்னணி நடிகர்களின் படங்களும் ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியானதால் தியேட்டர்காரர்கள் அதற்கு கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

இரண்டாவது அலை வந்த பின்பு ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகும் படங்களுக்கு பெரிய அளவில் எதிர்ப்புகள் எழவில்லை. இந்த சீசனில் பெரிய படமாக 'ஜகமே தந்திரம்' படம் மட்டும்தான் இதற்கு முன்பு வெளியானது. அடுத்து ஆர்யா நடித்துள்ள 'சார்பட்டா பரம்பரை', சிவகார்த்திகேயன் தயாரித்துள்ள 'வாழ்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

தெலுங்கில் வெங்கடேஷ் நடித்துள்ள 'நரப்பா' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் நடித்துள்ள மற்றொரு படமான 'த்ரிஷ்யம் 2' படமும் ஓடிடியில் தான் வெளியாகப் போகிறது. மேலும், ராணா டகுபட்டி, சாய் பல்லவி நடித்துள்ள 'விராட பர்வம்' படமும் ஓடிடி ரிலீஸ்தானாம். இப்படி மூன்று பெரிய படங்களை எடுத்து தியேட்டர்களில் வெளியிடாமல் ஓடிடியில் வெளியிடுவது சரியா என தெலுங்கு தியேட்டர்காரர்கள் கோபத்தில் உள்ளார்களாம்.

ஆனால், படத்தைத் தயாரித்துள்ள தயாரிப்பாளர்களுக்கு எந்தவித சிக்கலும் இல்லாமல் செலவு செய்ததற்கும் மேலாக லாபம் கிடைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள். 'நரப்பா' படம் 40 கோடி, 'த்ரிஷ்யம் 2' படம் 36 கோடி, 'விராட பர்வம்' படம் 50 கோடி என ஓடிடி தளங்கள் வாங்கியுள்ளதாம்.

தியேட்டர்களில் வெளியாகி படத்திற்கு நல்ல விமர்சனம் கிடைத்து ரசிகர்கள் வந்தால்தான் தயாரிப்பாளருக்கு லாபம். ஆனால், ஓடிடி தளங்களில் அந்த ரிஸ்க் கிடையாது. படத்தை நல்ல விலைக்கு விற்றாலே போதும், தயாரிப்பாளருக்கு லாபம். அதைத்தான் மேலே குறிப்பிட்ட மூன்று படங்களின் தயாரிப்பாளர்கள் செய்திருக்கிறார்கள் என தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !