உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமநாதபுரம் சென்று மகன் பிறந்த நாளை கொண்டாடிய கே.பாக்யராஜ்

ராமநாதபுரம் சென்று மகன் பிறந்த நாளை கொண்டாடிய கே.பாக்யராஜ்

கே.பாக்யராஜின் மகன் சாந்தனு சினிமாவில் அறிமுகமாகி 10 ஆண்டுகளை தாண்டிய பிறகும் இன்னும் தன்னை ஒரு ஹீரோவாக நிலை நிறுத்திக் கொள்ள போராடி வருகிறார். சமீபகாலமாக அவர் கவனிக்க வைக்கும் படங்களில் நடித்து வருகிறார். நெட்பிளிக்சில் வெளியான பாவ கதைகள் ஆந்தாலஜி மற்றும் வானம் கொட்டட்டும், விஜய்யின் மாஸ்டர் போன்ற படங்களில் நடித்து தன் திறமையை நிரூபித்து வந்தார்.

தற்போது இராவண கோட்டம் என்ற படத்தில் நடித்து வருகிறார். கொரோனா ஊரடங்கால் தடைபட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்புகள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ராமநாதபுரத்தில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது.

கடந்த 24ந் தேதி சாந்தனுவுக்கு பிறந்த நாள். வழக்கமாக பிறந்த நாளை அவர் எப்போதும் தனது தாய், தந்தையுடன் கொண்டாடுவார். ஆனால் இந்த முறை அப்படிச் செய்தால் மூன்று நாட்கள் வரை படப்பிடிப்பு தடைபடும் என்பதால் பிறந்த நாள் விழாவை தவிர்க்க முடிவு செய்திருந்தார். ஆனால் பிறந்த நாள் அன்று கே.பாக்யராஜ் ராமநாதபுரத்துக்கே சென்று மகன் சாந்தனுவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

இராவண கோட்டம் படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினருடன், தனது தந்தை கொண்டு வந்த கேக்கை வெட்டி பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடினார் சாந்தனு. இயக்குநர் பாக்யராஜ் அவர்களின் வருகை இராவண கோட்டம் படத்தின் மொத்த படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கும் இராவண கோட்டம் படத்தினை, கண்ணன் ரவி தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !