உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூர்யா படத்திற்கு எதிராக தியாகராஜன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

சூர்யா படத்திற்கு எதிராக தியாகராஜன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

2018ம் ஆண்டு சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்த படம் தானா சேர்ந்த கூட்டம். விக்னேஷ்சிவன் இயக்கி இருந்தார், கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருந்தார். இந்த படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஞானவேல்ராஜா தெலுங்கில் டப் செய்து வெளியிட்டிருந்தார்.

இதை எதிர்த்து நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன், அவரது மனைவி சாந்தி ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் நடிகர் சூர்யா நடித்த படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார். இது ஒப்பந்தத்திற்கு முரணானது. எனவே, இந்த படத்தை தெலுங்கில் வெளியிட தடை விதிக்க வேண்டும். என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. தானா சேர்ந்த கூட்டம் திரைப்படத்தை தெலுங்கில் டப் செய்து வெளியிட ஞானவேல்ராஜாவுக்கு உரிமை உள்ளது என்று அவர் தரப்பு வழக்கறிஞர் என்று வாதிட்டார். தியாகராஜன் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த படத்தை தெலுங்கில் டப்பிங் செய்ய ஞானவேல்ராஜாவுக்கு உரிமை இல்லை என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தானா சேர்ந்த கூட்டம் படத்தை தெலுங்கு டப்பிங் செய்ய ஞானவேல்ராஜாவுக்கு முழு உரிமை உள்ளது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

தானா சேர்ந்த கூட்டம் படம் 2013ல் வெளிவந்த இந்தி படமான ஸ்பெஷல் 26 என்ற படத்தின் ரீமேக் ஆகும். இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமம் தியாகராஜனிடம் உள்ளது. ஆனாலும் டப்பிங் வேறு, ரீமேக் வேறு என்பதால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது என்று நீதிமன்ற வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !