துரந்தர் தி ரிவெஞ்ச்
தயாரிப்பு : ஜி.ஸ்டூடியோஸ்
இயக்கம் : ஆதித்யா தர்
நடிப்பு : ரன்வீர்சிங், அர்ஜூன் ராம்பால், மாதவன், சஞ்சய் தத், சாரா அர்ஜூன், ராகேஷ்
ஒளிப்பதிவு : விகாஸ்நவ்லகா
இசை : சஷ்வத்சத்தேவ்
வெளியான தேதி : மார்ச் 19, 2026
நேரம் : 3 மணிநேரம் 49 நிமிடம்
ரேட்டிங் : 3.5 / 5
இந்திய ராணுவத்தில் பணியாற்றும் துடிப்பான இளைஞரான ரன்வீர்சிங், லோக்கல் எம்எல்ஏவின் அட்டகாசத்தால் குடும்பத்தில் பல இழப்புகளை சந்திக்கிறார். அதற்கு பழிவாங்க ஏ.கே.47 துப்பாக்கி எடுத்துக் கொண்டு எம்எல்ஏ ஆட்களை கொன்று குவிக்கிறார். அவருக்கு சட்டப்படி தண்டனை கிடைக்க, ஒரு கும்பல் அவரை கடத்துகிறது. '' உன் கோபத்தை, வீரத்தை தேசப்பக்திக்கு பயன்படுத்து, தீவிரவாதிகளை கொன்று குவி'என்று இந்திய உளவாளியாக மாற்றி, பாகிஸ்தானுக்குள் ஹம்ஸா என்ற பெயரில் அனுப்புகிறது நம் உளவுத்துறை. அங்கே கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, பல அதிரடிகள் செய்து கராச்சி அருகே உள்ள லியாரி பகுதிக்கு டான் ஆகிறார் ரன்வீர் சிங். பாகிஸ்தான் அரசியல்வாதிகள், தீவிரவாதி அமைப்புகள் நம்பும் பெரிய ஆயுத வியாபாரியாக மாறுகிறார்.
அப்படியே இந்தியாவுக்கு எதிராக செயல்படும் தீவிரவாத அமைப்புகளின் தலைவர்கள், அரசியல்வாதிகளை ரகசியமாக கொன்று குவிக்கிறார். வரிசையாக பலர் கொல்லப்பட, ரன்வீர் மீது பாகிஸ்தான் பெருந்தலைகளுக்கு சந்தேகம் வருகிறது. பாகிஸ்தான் பிடியில் உளவாளியான ரன்வீர்சிங் பிடிபட்டாரா? தப்பித்தாரா? பாகிஸ்தானில் அவருக்கு கொடுக்கப்பட்ட ஆபரேஷன்களை கச்சிதமாக முடித்தாரா? இதுதான் ஆதித்யா தர் இயக்கிய துரந்தர் தி ரிவெஞ்ச் படத்தின் கரு. முதற்பாகம் பார்த்தவர்களுக்கு ஓரளவு 2வது பாகம் குறித்து ஐடியா இருக்கும். உலகளவில் துரந்தர் முதற்பாகம் ஆயிரத்து 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. இரண்டாம் பாகம் தமிழிலும் டப்பாகி வந்துள்ளது.
உலகளவில் உளவாளிகள் குறித்து ஏகப்பட்ட படங்கள் வந்திருந்தாலும், துரந்தர் தி ரிவெஞ்ச் அதிலிருந்து மாறுபட்டது. காரணம், இந்த உளவாளியிடம் இருக்கும் தேசப்பக்தி, பெரும்கோபம். அந்த கேரக்டருக்கு பக்காவாக பொருந்தியிருக்கிறார் ரன்வீர் சிங். பஞ்சாப்பில் ஒரு ராணுவ குடும்பத்தில் வளரும் அவர் வாழ்வில் சில துயரங்கள் நடக்க, கோபத்தில் துப்பாக்கி ஏந்தி ஒரே இரவில் எதிராளி வீட்டுக்குள் சென்று கொன்று குவிப்பதில் இருந்து அவரின் ஆக் ஷன் ஆரம்பிக்கிறது. 'என் தங்கை எங்கே' என கேட்டு, ஒவ்வொருத்தரையும் கொடூரமாக பழிவாங்கும் அந்த சீனை தனி படம் பார்த்த பீலிங். அப்புறம் பாகிஸ்தானுக்குள் சென்று ஹம்ஸா என்ற தாதாகவாக மாறி, கெட்அப் மாறி அவர் ஆடுகிற ஆட்டம்தான் துரந்தர்2 படத்தின் முக்கியமான விஷயம்.
முதலில் அப்பாவியான இளைஞன், அடுத்து பாசக்கார அண்ணன், அதற்கடுத்து பாகிஸ்தான் தாதா, அடுத்து பாகிஸ்தான் பவர்புல் ஆயுத வியாபாரி, அன்பான கணவன், உளவுத்துறை விசுவாசி என பல பரிணாமங்களில் அவர் கலக்கியிருக்கிறார். குறிப்பாக, ஆக் ஷன் காட்சிகளில், கிளைமாக்சிலும்
ருத்ரதாண்டவம் ஆடியிருக்கிறார். ஒவ்வொரு சண்டைக்காட்சியும், பழிவாங்கும் காட்சியும், பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தீவிரவாதி தலைவர்களை கொல்லும் காட்சிகளும் செம. அவரின் கோபமும், ஆக் ஷனுமே படத்தின் பெரிய பலம். ரன்வீரை இந்தியாவே கொண்டாடும், பல விருதுகளும் கிடைக்கும். ஆக் ஷன் தவிர சில சென்டிமென்ட் காட்சிகளிலும் ரன்வீர் ஸ்கோர் செய்து இருக்கிறார். அவரை போல வில்லனாக, பாகிஸ்தான் தளபதியாக வரும் அர்ஜூன் ராம்பாலும் அந்த கேரக்டரின் தன்மை உணர்ந்து மிரட்டியிருக்கிறார். அவரின் கெட்அப், தந்தையை கொல்லும் சீன், ரன்வீர்சிங்குடனான சண்டைகாட்சி சிறப்பு.
இவர்களை தவிர, எஸ்பி என்ற பாகிஸ்தான் அதிகாரியாக வரும் சஞ்சய்தத் இயல்பான நடிப்பில் கலக்கியிருக்கிறார். பல ஹிந்தி படங்களில் காமெடியனாக நடித்த ராகேஷ் இதில் பாகிஸ்தான் அரசியல்வாதியாக வருகிறார். குறிப்பாக, கிளைமாக்சில் அவர் காட்சிகள், அவர் பேசும் வசனங்களை பார்த்து ஆச்சரியப்படாதவர்கள் இருக்க முடியாது, செம கேரக்டர். ஆக் ஷன் படம் என்பதால் ஹீரோயின் சாரா அர்ஜூனுக்கு அதிகம் வேலை இல்லை. சில இடங்களில் அழகாக இருக்கிறார், கொஞ்சம் நடித்து இருக்கிறார்.
இந்த படத்தின் உயிர்நாடி இந்திய உளவுத்துறை, அவர்கள் செய்யும் ஆபரேஷன்கள்தான். உளவுத்துறை தலைவராக வருபவர் நம்ம மாதவன், அடையாளமே தெரியாத அளவுக்கு வழுக்கை தலையுடன், புது கெட்அப்பில், வழக்கமான தனது பாடிலாங்குவேஜ்ஜை எந்த இடத்திலும் வெளிப்படுத்தாமல் நடிப்பில் முத்திரை பதித்து இருக்கிறார். அவ்வப்போது அவரும் அவரின் சீன், அவர் போடும் கட்டளைகள், கிளைமாக்சில் போனில் அவர் பேசும் காட்சிகள் வாவ் சூப்பர். மாதவன் சினிமா வாழ்க்கையில் இது முக்கியமான படம். இந்தியாவின் புகழ்பெற்ற உளவுஅதிகாரி அஜித்தோவல் சாயலில் இருக்கும் அவர் கேரக்டரை யாரும் மறக்க முடியாது. அப்புறம், தாதா தாவூத் இப்ராஹிம் கேரக்டர் வடிவமைப்பும் கச்சிதம்.
நடிப்பு ஒரு பக்கம் என்றால், படத்தின் இன்னொரு பலம் ஆக் ஷன் சீன்கள் தான். இப்படிப்பட்ட சண்டைக் காட்சிகளை பாலிவுட் பார்த்திருக்குமா என தெரியவில்லை. ஒவ்வொரு ஆக் ஷனிலும் அவ்வளவு ரத்தம், கோபம். அவ்வளவு ராவாக பல சண்டைக்காட்சிகளை எடுத்து இருக்கிறார்கள். அதிலும் அந்த கிளைமாக்ஸ் சண்டை அடடா. இவ்வளவு வன்முறை இருந்தாலும் தேசபக்திகதை என்பதால் அதை ரசிக்கிற மனநிலை, கைதட்டி கொண்டாடுகிற மனநிலை ரசிகர்களுக்கு உருவாகிறது. ஒவ்வொரு தீவிரவாதியும் கொல்லப்படும்போது அப்படியொரு வெற்றி, மனநிலை. அப்படிப்பட்ட ஸ்கிரிப்ட் கொடுத்திருக்கிறார் இயக்குனர்.
பெரும்பகுதி கதை பாகிஸ்தானில் நடக்கிறது. அங்கே படப்பிடிப்பு நடத்த முடியாது என்பதால் பக்காவாக செட் அமைத்து, பல பகுதிகளை மேட்ச் செய்து எடுத்து இருக்கிறார். அந்த நேட்டிவிட்டி பக்கா. அதேபோல், படத்தின் கதையுடன், பல இந்திய அரசியல் சம்பவங்கள் செட்டாகி இருக்கின்றன. ஒரு முக்கிமான காட்சியில் இந்தியாவின் பிரதமராக மோடி பதவி ஏற்கிறார். இந்தியாவை அழிக்க 60 ஆயிரம் கோடிக்குமேல் கள்ளநோட்டுகளை பாகிஸ்தான் புழக்கத்தில் விட திட்டமிட்ட, அந்த நேரத்தில் இந்தியாவில் பணமதிப்பு இழப்பு நடவடிக்கையை அறிவிக்கிறார் மோடி. தீவிரவாதத்தை தடுக்க, அவர்கள் திட்டத்தை தடுக்கவே அந்த நடவடிக்கை என புத்திசாலிதனமாக ஸ்கிரிப்ட் அமைத்து இருக்கிறார் இயக்குனர். அதேபோல் இந்தியாவை, இந்திய ராணுவத்தை புகழும் காட்சிகள் நிறைய. உ.பியில் இரண்டு அரசியல் புள்ளிகள் சுட்டுக் கொல்லப்பட்டதை கூட கதையோடு இணைத்து இருக்கிறார்கள்.
சினிமா என்றாலும் பல இடங்களில் நம்மை அறியாமல் கை தட்ட வேண்டிய, விசில் அடிக்க வேண்டிய, ஆத்திரத்தில் கத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அந்த அளவுக்கு கதையுடன் ராணுவத்தின் பெருமை, தியாகம், உளவாளிகளின் துயரம், தேசபக்தி, தீவிரவாதிகளுக்கு பதிலடி என பல விஷயங்களை கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குனர். அதிலும், உளவு அதிகாரி மாதவன் சம்பந்தப்பட்ட சில சீன், ரன்வீர் சிங்கின் சில கோபம் மெய்சிலிர்க்க வைக்கிறது. உளவுத்துறை, ராணுவம், தீவிரவாதிகளின் திட்டம், தாவூத் இப்ராஹிம் சம்பந்தப்பட்ட கிளைமாக்ஸ் சீன் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. விகாஸ் ஒளிப்பதிவு, சச்தேவ் இசை, ஆக் ஷன் காட்சிகள், எடிட்டிங் படத்தின் நான்குதுாண்கள்.
படத்தின் நீளம் கிட்டத்தட்ட 4 மணி நேரத்திற்கு கொஞ்சம் குறைவு. சில இடங்களில் தொய்வு, அதிக வன்முறை, சில தனிப்பட்ட நிலைப்பாடுகள், சில அரசியல்பாலிசி, அவ்வப்போது தேவையில்லாத காட்சிகள் என குறைகள் இருந்தாலும், துரந்தர் தி ரிவெஞ்ச் இந்திய சினிமாவில் தனியிடத்தை பிடிக்கும் பார்வையாளர்களுக்கு மறைமுக தேசபக்தியை வளர்க்கும். ராணுவத்தின், உளவுதுறையின் தியாகத்தை உழைப்பை போற்ற செய்யும். ஏன்டா, தமிழில் இந்த மாதிரி கதைகள் வருவது இல்லை என கேட்க செய்யும்.
துரந்தர் தி ரிவெஞ்ச் - ஒரு முக்கியமான சீனில் படம் பார்க்கும் ரசிகர்கள் 'பாரத் மாதாகி ஜே' என உணர்ச்சிவசப்பட்டு கத்துகிறார்கள். ஒரு படைப்புக்கு இதை விட வேறென்ன பெருமை வேணும்!