பஞ்சவடீ வேங்கடாஜலபதி சன்னதியில் பரமபத வாசல் திறப்பு
புதுச்சேரி: பஞ்சவடீ ஆஞ்ஜநேயர் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி சன்னதியில், இன்று வைகுண்ட ஏகாதசி பரமபத வாசல் திறப்பு வைபவம் நடைபெற்றது.
திண்டிவனம் - புதுச்சேரி நெடுஞ்சாலை பஞ்சவடீயில் ஆஞ்ஜநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு, மத்திய திருப்பதி எனும் சன்னதி அமையப்பெற்று, ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி சுவாமி அருள்பாலித்து வருகிறார். வைணவ ஆலயங்களில் ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் வைகுண்ட ஏகாதசி விழா, பஞ்சவடீ ஸ்ரீவாரி வேங்கடாஜலபதி ஆலயத்தில் இன்று கொண்டாட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனையொட்டி நேற்று காலை 8:00 மணிக்கு திருமஞ்சனம் ஏற்று மாலை 6:00 மணியளவில் மோகினி அவதாரத்தில் பெருமாள் எழுந்தருளினார். இன்று (6ம் தேதி) காலை 5:00 மணியளவில் பரமபத வாசல் வழியே உற்சவர் ஸ்ரீநிவாச பெருமாள் புறப்பாடு நடைபெற்றது. வசந்த மண்டபத்தில் நாள் முழுவதும் அருள்பாலிக்கிறார். ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் தலைவர் நிர்வாக அறங்காவலர் கோதண்டராமன் மற்றும் அறங்காவலர்கள் செய்து வருகின்றனர்.