உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கல்ப விருக்ஷ வாகனம்

கல்ப விருக்ஷ வாகனம்

வேண்டும் வரங்களை அளிக்கவல்லது கல்ப விருக்ஷம் எனும் மரம். சிவன் கோயில்களில் கல்ப விருக்ஷ வாகனம் பிரபலம். எனினும், சில மஹா விஷ்ணு கோயில்களிலும் இந்த வாகனத்தைக் காணலாம். மயிலை கபாலீஸ்வரர் கோயிலில் பங்குனி மாத உத்ஸவத்தின் முதல் நாள் இரவன்று,  தேவி கல்ப விருக்ஷ வாகனத்திலும், ஐயன் புன்னை விருக்ஷ வாகனத்திலும், முருகன் தன்  இரு துணைவிமார்களுடன் வேங்கை விருக்ஷ வாகனத்திலும் வலம் வருவார்கள்.

இரண்டு வகையான கல்ப விருக்ஷ வாகனம் உண்டு. ஒன்று, பல கிளைகளும், அதன் மீது  இலைகளும் கொண்ட மரமாகக் காட்சி அளிக்கிறது. இதன் மேல் நிஜ இலைகளை  அலங்காரமாக வைக்கப்படுவது உண்டு. மற்றொரு வகை, வாழை மரத்தைப் போல் ஒரே தண்டுடன் உயர்ந்து நின்று, இலைகள் உச்சியிலிருந்து விரித்து வருவது போல்  அமையப்பெற்றிருக்கும். நமது புராணங்களில் தேவலோகத்து மரம் என்று மந்தாரை, பாரிஜாதம் சந்தனம், ஹரிசந்தனம் மற்றும் கல்ப விருக்ஷம் என ஐந்து வகை மரங்களைப் பற்றிய குறிப்புக்கள்  உள்ளன. சில புராணங்கள் அசுரர்களும், தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய விசேஷமான பொருள்களில் இதுவும் ஒன்றெனக் கூறுகின்றன. சிவபெரு மானின் வசிப்பிடமான கயிலாயத்தில் உள்ள தோட்டத்தின் பெயர், ‘கல்பகா’ என்பது  குறிப்பிடத்தக்கது. திருமங்கை ஆழ்வார், இமாலயத்தில் மஹா விஷ்ணுவின் இருப்பிடமான பத்ரியை  விவரிக்கும்போது இந்த விருட்சத்தைக் குறிப்பிடுகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !