மருதமலை தைப்பூச திருவிழா நிறைவு
ADDED :2218 days ago
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், தைப்பூச திருவிழா, நேற்றுடன் நிறைவடைந்தது.முருகனின் ஏழாம் படை வீடாக கருதப்படும், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில், கடந்த, 2ம் தேதி, கொடியேற்றத்துடன், தைப்பூச திருவிழா துவங்கியது.
நாள்தோறும், சுப்பிரமணியசுவாமிக்கு, சிறப்பு அபிஷேகம் பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடந்தன. காலை, மாலை இருவேளையும், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி, தெய்வானையுடன் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா, கடந்த, 8ம் தேதி வெகு விமரிசையாக நடந்தது. தைப்பூச திருவிழாவின், பத்தாம் நாளான நேற்று, சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை பூஜைகள் நடந்தன.பகல், 12:00 மணிக்கு உச்சிகால பூஜை நடந்தது. மாலை, 6:00 மணிக்கு, தங்கரத புறப்பாடுடன், தைப்பூச திருவிழா நிறைவடைந்தது.