புனித தெரசம்மாள் ஆலயத்தில் திருப்பலி: கிறிஸ்தவர்கள் பங்கேற்க முடியாத நிலை
ADDED :2155 days ago
கரூர்: ஊரடங்கு உத்தரவால், கரூர் புனித தெரசம்மாள் ஆலயத்தில், பங்கு மக்கள் பங்கேற்காத நிலையில், நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. உலகம் முழுவதும், நேற்று கிறிஸ்தவர்களின் முக்கிய திருவிழாவான, ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட்டது. நமது நாடு முழுவதும், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கடந்த, 25 முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், கரூரில் பிரசித்தி பெற்ற புனித தெரசம்மாள் ஆலயத்தில் நடந்த, ஈஸ்டர் திருநாள் சிறப்பு திருப்பலியில், பங்கு மக்கள் பங்கேற்கவில்லை. பங்கு தந்தை செபாஸ்டின் துரை தலைமையில் நடந்த, சிறப்பு திருப்பலியில், இரண்டு உதவியாளர்கள் மட்டுமே பங்கேற்றனர். இதேபோல், கரூர் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில், கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் திரு நாளை கொண்டாடவில்லை.