உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1 கோடி வசூல்

திருப்பதியில் ஒரே நாளில் ரூ.1 கோடி வசூல்

திருப்பதி : திருமலை ஏழுமலையான் உண்டியல் வருவாய் ஒரு கோடி ரூபாய் வசூலானது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிக வருமானம் உண்டியல் மூலம் கிடைத்து வருகிறது. ஒரு ஆண்டிற்கு 1000 கோடி ரூபாய்க்கும் மேல் உண்டியல் மூலம் வருவாய் கிடைக்கிறது. கொரோனா தொற்று காலங்களில் ஊரடங்கு அமலில் இருந்த போதும் இ - -உண்டியல் மூலம் பக்தர்கள் ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தினர். தற்போது ஏழுமலையானை தரிசித்து செல்லும் பக்தர்கள் குறைவாக இருந்தாலும் நேற்று முன்தினம் ஒரே நாளில் 15 ஆயிரத்து 349 பேர் ஏழுமலையானை தரிசித்தனர். அவர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ஒரு கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. ஊரடங்கிற்கு பின் துவங்கிய தரிசனத்தில் ஏழுமலையானுக்கு கிடைத்த முதல் பெரிய வருமானம் இது என அதிகாரிகள் தெரிவித்தனர். திருமலையில் இம்மாதம் 19 முதல் 27ம் தேதி வரை வருடாந்திர பிரம்மோற்ஸவம் நடக்க உள்ளது. அதற்காக செப். 15ம் தேதி ஏழுமலையான் கோவிலை சுத்தப்படுத்தும் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கவுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக வருடாந்திர பிரம்மோற்ஸவத்தை தேவஸ்தானம் தனிமையில் நடத்த முடிவு செய்துள்ளது. எனவே செப். 15 மற்றும் செப். 19 முதல் செப். 27ம் தேதி வரையிலான விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !