காரமடை அரங்கநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு
ADDED :1870 days ago
மேட்டுப்பாளையம்: தீபாவளியை முன்னிட்டு, காரமடை அரங்கநாதர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது. காலையில் மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனமும், அதைத்தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி, திருப்பாவை, சாற்று முறை ஆகியவை சேவிக்கப்பட்டன. இதில், கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி ரங்காச்சாரி, வேத வியாச ஸ்ரீதர் பட்டர், அர்ச்சகர்கள் சுரேஷ், நாராயணன், திருவேங்கடம், கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் உட்பட மிராசுதாரர்கள் பங்கேற்றனர். இந்து சமய அற நிலைய துறையின் விதிகளுக்கு உட்பட்டு, சமூக இடைவெளி கடைபிடித்து தரிசனம் செய்தனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள சக்தி விநாயகர் கோவிலில், தீபாவளியை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். சிறப்பு பூஜையில் பங்கேற்று, விநாயகர் மற்றும் வெள்ளியங்கிரி ஆண்டவரை வழிபட்டுச் சென்றனர்.