காணும் பொங்கல் பண்டிகை: கோவை குற்றாலத்தில் குதூகலம்
ADDED :1877 days ago
பேரூர்:காணும் பொங்கல் தினமான நேற்று, கோவை குற்றாலத்துக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை தந்து குளித்து குதுாகலித்தனர். கோவை மேற்குத் தொடர்ச்சி மலையில் அடர்வனத்தில் அமைந்துள்ளது குற்றாலம் நீர்வீழ்ச்சி. அதில், குளித்து மகிழ்வதற்காக புத்தாண்டு, தீபாவளி, பொங்கல், கோடை விடுமுறை உள்ளிட்ட நாட்களில், வழக்கத்தை விட, சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகம் காணப்படும்.காணும் பொங்கல் நாளான நேற்று, காலை, 9:00 மணி முதலே பயணிகளின் வருகை அதிகமாக இருந்தது. பெரும்பாலானோர் குடும்பமாக வந்திருந்தனர். மழை சாரலுடன் பொங்கிய நீர்வீழ்ச்சியில் குளித்து குதுாகலித்தனர்.பின்னர், எடுத்து வந்திருந்த உணவை கூட்டாக உண்டு மகிழ்ந்தனர். இதனால், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி, பார்க்கிங் பகுதிகள் கலகலவென காட்சியளித்தது.