கச்சத்தீவு சர்ச் திருவிழா ரத்து கொரோனா அச்சம் எதிரொலி
ராமேஸ்வரம்: கொரோனா பரவலால் கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் விழாவை இலங்கை அரசு ரத்து செய்தது என யாழ்பாணம் கத்தோலிக்க மறைமாவட்ட அதிபர் ஜெபரத்தினம் தெரிவித்தார்.
ராமேஸ்வரத்தில் இருந்து 14 கடல் மைல் துாரத்தில் பாக்ஜலசந்தி கடலில் அமைந்துள்ள கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவில் இந்திய, இலங்கை பக்தர்கள் பங்கேற்பர். இந்தாண்டு பிப்.,26, 27ல் கச்சத்தீவு சர்ச் திருவிழா நடத்த யாழ்ப்பாணம் கத்தோலிக்க மறைமாவட்டம் ஏற்பாடு செய்தது. கொரோனா பரவலால் இந்திய, இலங்கை பக்தர்கள் செல்ல தடை விதித்து, இலங்கை நெடுந்தீவில் இருந்து பாதிரியார், கன்னியாஸ்திரிகள் உள்ளிட்ட 150 பக்தர்கள் மட்டும் பங்கேற்பது என யாழ்பாணம் பிஷப் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்தனர்.விழா ரத்து : இந்நிலையில் நேற்று யாழ்பாணம் மறைமாவட்ட அதிபர் ஜெபரத்தினம், ராமேஸ்வரம் பாதிரியார் தேவசகாயத்திற்கு அனுப்பிய இ-மெயிலில், கச்சத்தீவு விழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால், இந்தாண்டு திருவிழாவை ரத்து செய்து இலங்கை சுகாதாரத்துறை உத்தரவிட்டது. 2022ல் நடக்கும் திருவிழாவில் அனைத்து பக்தர்களும் பங்கேற்கலாம் என தெரிவித்துள்ளார்.