பரிமள ரெங்கநாதர் கோயிலில் பங்குனி தேரோட்டம்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோயில் பங்குனி உத்திர பெருந்திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்து இழுத்து தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை திருவிழந்தூர்; பரிமள ரெங்கநாயகி சமேத பரிமள ரெங்கநாதர் ஆலயத்தில் இன்று தேரோட்டம் நடைபெற்றது. 108திவ்ய தேசங்களுல் 22வது திவ்யதேசமும் பஞ்ச அரங்கங்களில் 5வது அரங்கமுமான இந்த கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வருகிறது. உற்சவத்தின் 9ம் திருநாள் உற்சவமான திருத்தேரோட்டம் இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் பரிமளரெங்கநாதர் தேரில் எழுந்தருளசெய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என கோஷமிட்டவாறு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தொடர்ந்து மதியம் பெருமாள் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.